மீண்டும் சதி? பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு
இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 சுற்றுலா பயணிகளை கொன்றனர். இதற்கு நம் நாடும் பதிலடி கொடுத்த நிலையில் பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி நம்நாட்டுக்கு எதிரான பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அதில் லஷ்கர் இ தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத்தின் மகன் உள்பட பலர் பங்கேற்றுள்ளதால் நம் நாட்டுக்கு எதிராக சதி வேலை நடக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் பலியாகினர். இந்த கொடூர தாக்குதலுக்கு ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' என்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு தான் பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு என்பது லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணைப்பிரிவாகும்.

இந்த தாக்குதலுக்கு நம் நாடும் பதிலடி கொடுத்தது. ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் கடந்த 7 ம் தேதி நள்ளிரவு 1.05 மணி முதல் 1.30 மணி வரை நம் நாடு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது.
இதையடுத்து இருநாடுகள் இடையேயான மோதல் என்பது அதிகரித்தது. பாகிஸ்தான் நம் மீது ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவி தாக்க முயன்றது. அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. அதன்பிறகு நம் நாடு நடத்திய ஏவுகணை தாக்குதலில் பாகிஸ்தானின் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள், ரேடார் அமைப்புகள், விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன. இருநாடுகள் இடையே 10ம் தேதி வரை தொடர்ந்து மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தானால் நம்மை ஒன்று செய்ய முடியவில்லை. இதையடுத்து போர் நிறுத்தம் செய்ய பாகிஸ்தான் கெஞ்சியதால் சண்டை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தான் பஹல்காம் தாக்குதலுக்கு மூளை என கூறப்படும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த கமாண்டர் சாய்புல்லா கசூரி என்ற காலித் நம் நாட்டுக்கு எதிரான வேலையில் இறங்கி உள்ளார். தற்போது அவர் நம்நாட்டுக்கு எதிராக பாகிஸ்தானில் பேரணி நடத்தி உள்ளார். இதில் பாகிஸ்தானின் அரசியல் கட்சியினர், லஷ்கர் இ தொய்பா அமைப்பினர் நிறுவனரும், பயங்கரவாதியுமான ஹபிஸ் சயத்தின் மகன் தால்ஹா சயத் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
பாகிஸ்தானின் அணு ஆயுத சோதனையை நடத்திய தினத்தை ‛யூம்-இ-தக்பீர்' கொண்டாடும் வகையில் பாகிஸ்தான் மர்காசி முஸ்லிம் லீக் (PMML) சார்பில் இந்த பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இந்த கூட்டம் நடந்தது. இதில் சாய்புல்லா கசூரி பேசுகையில், ‛‛ பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக இருந்தது நான் தான் என்று குற்றம்சாட்டுகிறார்கள். இப்போது என் பெயர் உலகம் முழுவதும் பேமஸாகி உள்ளது'' என்றார். இதில் முதாசீர் ஷாகீத் என்பது பயங்கரவாதி முதாசீர் அஹமதுவை குறிக்கும். இது யார் என்றால் நம்நாட்டில் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஒருவராக இருந்தவர். பஹல்காம் தாக்குதலுக்கான பதிலடி நடவடிக்கையின்போது அவர் கொல்லப்பட்டார்.
இந்த பொதுக்கூட்டத்தில் தல்ஹா சாகித் இருந்தார். இவர் நம் நாட்டின் தேடப்படும் 32வது பயங்கரவாதியாக உள்ளார். இவர் நம் நாட்டுக்கு எதிராக பேசி வன்மத்தை கக்கினார். இவர் பாகிஸ்தானின் 2024 நாடாளுமன்ற தேர்தலில் லாகூரின் NA-122 தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.












Click it and Unblock the Notifications