லிபிய பிரதமருக்கு எதிராக புரட்சி: போராளிகளுடன் சேர்ந்து அரசே கைது செய்தது
திரிபோலி: லிபிய பிரதமர் அலி ஜைடன் கடத்தப்படவில்லை மாறாக அவர் உள்துறை அமைச்சகத்தால் கைது செய்யப்பட்டுள்ளாராம்.
லிபிய பிரதமர் அலி ஜைடன் திரிபோலியில் உள்ள கொரிந்தியன் ஹோட்டலில் இருந்து துப்பாக்கி ஏந்திய போராளிகளால் கடத்தப்பட்டார் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அவர் கடத்தப்படவில்லை என்றும் உள்துறை அமைச்சகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அட்டர்னி ஜெனரலின் உத்தரவுப்படி உள்துறை அமைச்சகம் மற்றும் முன்னாள் போராளிகள் சிலரும் கூட்டாக சேர்ந்து செயல்பட்டு அலி ஜைடனை கைது செய்துள்ளார்கள் என்று அல் ஜெசீரா தொலைக்காட்சி சேனல் தெரிவித்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டு மற்றும் அல் கொய்தா தலைவர் அபு அனஸ் அல் லிபி அமெரிக்க சிறப்பு படையால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்பு ஆகிய காரணங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஸ்கை நியூஸ்-அரேபியா டிவி சேனல் தெரிவித்துள்ளது.
ஆனால் அலியை கைது செய்ய தான் வாரண்ட் பிறப்பிக்கவே இல்லை என்று அட்டர்னி ஜெனரல் கூறியதாக அல் அரேபியா சேனல் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஜைடனை ஆயுதம் ஏந்திய சிலர் கடத்திச் சென்றதாக அவரது செய்தித் தொடர்பாளர் முகமது கப்ர் தெரிவித்தார். மேலும் ஜைடன் போராளிகளால் கட்டத்தப்பட்டதாக நீதித் துறை அமைச்சர் சலா பஷிர் மார்கானி அல் அரேபியா சேனலிடம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications