மொசாம்பிக்கில் கரை ஒதுங்கிய விமான பாகம் மாயமான மலேசிய விமானத்தினுடையது?
மபுடோ: இந்திய பெருடங்கடலோரம் அமைந்துள்ள மொசாம்பிக் நாட்டில் கரை ஒதுங்கியுள்ள விமான பாகம் மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச்.370 மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசியா தெரிவித்தபோதிலும் இதுவரை விமானத்தின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை.
தெற்கு இந்திய பெருங்கடலில் ஆண்டுக்கணக்கில் தேடியும் விமான பாகம் எதுவும் கிடைக்கவில்லை.
மொசாம்பிக்
தெற்கு இந்திய பெருங்கடலோரம் அமைந்துள்ள ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் விமான பாகம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. அந்த பாகம் மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று கூறப்படுகிறது.
விமான பாகம்
அமெரிக்காவை சேர்ந்த பிளெய்ன் கிப்சன் என்பவர் மொசாம்பிக்கிற்கு சுற்றுலா வந்துள்ளார். அவர் ஒரு படகில் செல்கையில் தான் விமான பாகம் கரை ஒதுங்கிக் கிடந்ததை பார்த்து அதை எடுத்து மொசாம்பிக் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
மலேசியா
மொசாம்பிக்கில் கிடைத்துள்ள விமான பாகம் ஆய்விற்காக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கிடைத்துள்ள பாகம் மாயமான மலேசிய விமானத்தை போன்றே போயிங் 777 ரகத்தை சேர்ந்தது. மலேசிய விமானத்தை தவிர வேறு எந்த போயிங் 777 ரக விமானமும் மாயமாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதல் முறை அல்ல
முன்னதாக ஜூலை மாதம் பிரான்சின் ரியூனியன் தீவில் கரை ஒதுங்கிய விமான பாகம் மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்கும் என்று கூறப்பட்டு அது இல்லை என்பது தெரிய வந்தது. அதன் பிறகு கடந்த மாதம் 11ம் தேதி வியட்நாமில் கரை ஒதுங்கிய விமான பாகமும் மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்கும் என்று கருதப்பட்டு அதுவும் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.