என் காதலி என்னை விட்டுட்டுப் போயிட்டாளே.. கோபத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய சீனத்து யானை
பெய்ஜிங்: சீனத்து காட்டு யானை ஒன்று தனது காதலி பிரிந்து போன சோகத்தில் கோபத்தில் ஊருக்குள் புகுந்து ருத்ரதாண்டவம் ஆடி பல கார்களைச் சேதப்படுத்தியுள்ளது.
தெற்கு சீனாவின் ஸிசுவான்பானா பிரதேசத்தில் உள்ள வனப்பகுதியைச் சேர்ந்த ஆண் யானை ஒன்று தான் காதலித்து வந்த பெண் யானையை இன்னொரு ஆண் யானையிடம் சமீபத்தில் பறிகொடுத்தது. காதல் சண்டையில் காதலி பிரிந்து போனதால் கோபமடைந்த ஆண் யானை என்ன செய்வது என்று தெரியாமல் காட்டுக்குள் சுற்றிச் சுற்றி வந்தது. பின்னர் அது பக்கத்தில் இருந்த ஊருக்குள் புகுந்தது.
அங்கு சாலையில் இருந்த கார்களையும், பிற வாகனங்களையும் அது அடித்து நொறுக்கி சேதப்படுத்தியது. இதில் 12க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்தன.
கோபம்...
முதலில் அந்த யானை விளையாடுவதாக வனத்துறை அதிகாரிகள் நினைத்துள்ளனர். ஆனால் அதன் பிறகுதான் அது கோபத்தில் இருப்பது தெரிய வந்தது. இருப்பினும் இந்த யானையால் மனிதர்கள் யாருக்கும் காயமேற்படவில்லை.
20 மணி நேர தாக்குதல்...
கிட்டத்தட்ட 20 மணி நேரம் தனது கோபத்தைக் காட்டிய யானை பின்னர் மீண்டும் காட்டுக்குள் திரும்பிப் போய் விட்டது.
வீடியோ...
யானை தாக்குதலில் ஈடுபட்டதை காட்டுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் வேடிக்கை பார்த்தனர். பலர் அதை போட்டோவும், வீடியோவும் எடுத்தனர்.
இழப்பீடு...
இதற்கிடையே, யானையால் சேதமடைந்த கார்களுக்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.