இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க!
தெஹ்ரான்: போர் காரணமாக கடந்த 4 வாரங்களாக மூடப்பட்டிருந்த ஹார்முஸ் நீரிணை, இந்தியாவுக்காக திறக்கப்படும் என்று ஈரான் அறிவித்திருக்கிறது. இருப்பினும் கேஸ் சப்ளை தட்டுப்பாடு சரியாகுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை, கச்சா எண்ணெய்க்கு 88%, எல்பிஜிக்கு 60% வளைகுடா நாடுகளைதான் நாம் நம்பியிருக்கிறோம். இப்படி இருக்கையில், ஹார்முஸ் நீரிணை திறந்திருப்பது இந்தியாவுக்கு பாசிட்டிவ் செய்திதான். இருப்பினும் இந்தியாவில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விற்பனை இயல்பு நிலைக்கு திரும்பாது என்று சொல்லப்படுகிறது.

ஈரானின் உதவி
ஹார்முஸ் நீரிணை வழியாக எந்த கப்பல்களையும் அனுப்பாமல் தடை செய்து வைத்திருந்த ஈரான், இந்திய கப்பல்களுக்கும் மட்டும் அனுமதியளித்திருக்கிறது. இந்திய கப்பல்களுக்கு ஈரான் கடற்படை பாதுகாப்பு அளிக்க முன்வந்திருக்கிறது. ஹார்முஸ் நீரிணை வரை, கப்பல்களுக்கு ஈரான் பாதுகாப்பு அளிக்கும். அங்கிருந்து அரபிக்கடல் வரை, இந்திய கடற்படை கப்பல்கள் பாதுகாப்பு அளிக்கும். 'ஆபரேஷன் சங்கல்ப்' மூலம், இந்திய கப்பல்கள் பாதுகாப்பாக அழைத்துவரப்படுகின்றன.
இந்தியாவுக்கு வரும் கப்பல்கள்
ஈரான் அனுமதிக்கு பிறகு, ஜக் வசந்த், பைன் கேஸ் என 2 கப்பல்கள் இந்தியாவுக்கு வரவுள்ளன. ஒரு கப்பல் குஜராத்திலும், இன்னொரு கப்பல் மங்களூருக்கும் வர உள்ளது. 2 கப்பல்கள் மூலம் மொத்தம் 92,612 மெட்ரிக் டன் எரிவாயு வந்து இறங்கும். பார்ப்பதற்கு பெரிய அளவாக இருந்தாலும், இந்த அளவு வெறும் 24 மணி நேரத்திற்கு மட்டுமே போதுமானது. அதேபோல, இன்னும் 20 கப்பல்கள் நீரிணையை தாண்டுவதற்காக காத்திருக்கின்றன. இப்படி இருக்கையில்தான் ஈரானின் பாசிட்டிவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிலைமை சரியாகுமா?
சரி, இந்த 20 கப்பல்கள் இந்தியா வந்தால் எல்பிஜி தட்டுப்பாடு சரியாகுமா? என்கிற கேள்வி எழுகிறது. நிபுணர்கள் இதுபற்றி கூறுகையில், 20 கப்பல்களால் இந்தியாவின் தேவையை அதிகபட்சமாக 2 வாரங்களுக்கு மட்டுமே பூர்த்தி செய்ய முடியும் என்று கூறுகின்றனர். உண்மை என்னவெனில் ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டாலும் நிலைமை சரியாகாது.
கள நிலவரம்
காரணம், இந்த போரில் வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய்/எரிவாயு சுத்திகரிப்பு மையங்கள் கடுமையாக தாக்கப்பட்டிருக்கின்றன. அது சரியானால்தான் சப்ளை இயல்பு நிலைக்கு திரும்பும். உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு மையமான கத்தாரில் உள்ள 'ராஸ் லப்பான்' மற்றும் சவுதியில் உள்ள 'யான்பு' சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்கப்பட்டிருக்கின்றன. ராஸ் லப்பான் மீதான தாக்குதல், கத்தாரின் எரிவாயு உற்பத்தியில் 17%ஐ முடக்கியிருக்கிறது.
கால அவகாசம்
இதன் காரணமாக எரிபொருள் முன்பு போல இயல்பாக கிடைக்காது. இந்தியாவுக்கு வரும் எல்பிஜி அளவில் 15-20% வரை பாதிப்பு ஏற்படும். இப்போது எல்பிஜி சிலிண்டர் புக் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு சிலிண்டர் புக் செய்த பிறகு, இன்னொரு சிலிண்டர் புக் செய்ய குறிப்பிட்ட நாட்கள் இடைவெளி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
இல்லத்தரசிகளே உஷார்
இந்த இடைவெளி கட்டாயம் என்பது இன்னும் சில மாதங்களுக்கோ அல்லது ஓரிரு ஆண்டுகள் வரை கூட நீட்டிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. நிலைமையை சரி செய்ய அமெரிக்கா, அர்ஜெண்டினாவிடமிருந்து கூடுதல் எரிபொருளை வாங்க இந்தியா முயற்சித்து வருகிறது. அதேபோல ரஷ்ய கச்சா எண்ணெய்யையும் வாங்க திட்டமிட்டிருக்கிறது.
எனவே இல்லத்தரசிகள் சிலிண்டரை சிக்கனமாக பயன்படுத்தவும். இன்னும் சில மாதங்களுக்கு நிலைமை சீரடையாது. எனவே கவனமாக இருக்க நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.















Click it and Unblock the Notifications