Saudi Arabia: சவுதி அரேபியாவில் யாத்ரீக பயணம் சென்ற 42 இந்தியர்கள் பலி.. தூக்கத்திலேயே பறிபோன 11 குழந்தைகள் உயிர்
ரியாத்: சவுதி அரேபியா மதீனாவில் இன்று அதிகாலை இந்திய புனித பயணிகள் சென்ற பஸ்சும் டீசல் லாரியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 20 பெண்கள், 11 குழந்தைகள் என 42 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்தில் பலியானவர்கள் தெலுங்கானா மற்றும் ஐதராபத்தை சேர்ந்தவர்கள் என்று முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
சவுதி அரேபியாவின் மதீனா அருகே அதிகாலை பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. மெக்காவில் இருந்து மதீனாவிற்கு உம்ரா புனித பயணிகள் சென்ற பேருந்து டீசல் டேங்கர் லாரியுடன் மோதி விபத்தில் சிக்கியது. இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணிக்கு இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

20 பெண்கள், 11 குழந்தைகள்
இந்த விபத்தில் இந்திய புனித பயணிகள் 42 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதில் 20 பெண்கள், 11 குழந்தைகளும் அடங்குவர். விபத்து ஏற்படும் போது பெரும்பாலான பயணிகள் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்ததாக சொல்லபடுகிறது. விபத்தில் பலியானவர்கள் ஐதராபத்தை சேர்ந்தவர்கள் என்று முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
எத்தனை பேர் உயிரிழந்தனர். எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது பற்றி அதிகாரப்பூர்வமாக அதிகாரிகள் இன்னும் தெரிவிக்கவில்லை. விபத்து நடைபெற்ற இடத்தில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணியில் சவுதி அரேபியாவின் அவசர மீட்பு குழு ஈடுபட்டு வருகிறது.
இந்திய தூதரக அதிகாரிகள்
எத்தனை பேர் பலியாகினர் என்ற விவரம் உறுதி செய்யப்படவில்லை. உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி 42 பேர் பலியானதாகவும் காயம் அடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணியில் இந்திய தூதரக அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடலை இந்தியா எடுத்து வரவும், காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார்?
பேருந்தில் 43 பேர் பயணம் செய்ததாகவும், ஒருவர் மட்டுமே உயிர் தப்பியிருப்பதாகவும் கூறப்படுகிறது. டீசல் டேங்கர் லாரியுடன் மோதியதில் பேருந்து தீ பிடித்ததால், இந்த பெரும் துயரம் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. பேருந்து தீ பிடித்து எரியும் காட்சிகள் வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
தொலைபேசி எண்கள் அறிவிப்பு
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் தெலுங்கானா அரசு சிறப்பு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. உறவினர்கள் தங்கள் சொந்தங்களின் நிலை குறித்து அறிய இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை அறிந்து கொள்ள 79979-59754 or 99129-19545 என்ற தொலைபேசி எண்ணை தெலுங்கனா மாநில அரசு அறிவித்துள்ளது..
இந்த விபத்து குறித்து வேதனை தெரிவித்துள்ள தெலுங்கனா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பாதிக்கப்பட்டவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள், அவர்களின் குடும்பத்தினர் குறித்த விவரங்களை கேட்டு பெறுமாறு தலைமை செயலர் கே ராமகிருஷ்ன ராவ் மற்றும் டிஜிபி சிவ்தர் ரெட்டி ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அசாதுதின் ஓவைசி வேதனை
இந்த விபத்து குறித்து ஐதராபாத் எம்பி அசாதுதின் ஓவைசி, தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். ஓவைசி கூறுகையில், "ரியாத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரியுடன் தொடர்பில் உள்ளேன். விபத்து தொடர்பான தகவலை சேகரித்து வருவதாக அவர் என்னிடம் உறுதி அளித்தார். பலியானவர்களின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதிலும் காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதிலும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications