சீனாவுக்கு செக்.. வழிக்கு வந்த மாலத்தீவு.. ஜெய்சங்கர் பயணத்தினால் உருவான முக்கிய ஒப்பந்தம்
மாலே: மாலத்தீவு இந்தியா இடையே சமீப காலமாக மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், மூன்று நாட்கள் பயணமாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்த நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தில் இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள குட்டி தீவு நாடு மாலத்தீவு. பல்வேறு தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய மாலத்தீவு இந்தியாவுக்கு மிக நெருக்கமான நாடுகளில் ஒன்றாக இருந்தது. ஆனால், அங்கு கடந்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட முகம்மது முய்சு அதிபராக பொறுப்பேற்றார்.

அதன்பிறகு மாலத்தீவின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டது. குறிப்பாக பிரதமர் மோடி லட்சத்தீவு பயணத்தை இன ரீதியாக மாலத்தீவு முன்னாள் அமைச்சர்கள் விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்படும் நிலை உருவானது. இதன் தொடர்ச்சியாக மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களையும் அந்த நாடு வெளியேற்றியது. இதனால், இந்தியா - மாலத்தீவு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு இருந்தது.
இத்தகைய சூழலில், பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலத்தீவு அதிபர் முகம்மது முய்சு இந்தியா வந்தார். இதன் தொடர்ச்சியாக கடந்த 9 ஆம் தேதி இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மாலத்தீவு சென்றார். இந்த பயணத்தின் போது இந்தியா - மாலத்தீவு இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. யுபிஐ சேவையும் மாலத்தீவில் அறிமுகம் செய்ய ஒப்பந்தகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறும் போது, "டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா பெரும் புரட்சியை செய்து இருக்கிறது. இன்று உலகில் நிகழும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 40 சதவீதம் இந்தியாவில் நடக்கிறது. இத்தகைய டிஜிட்டல் கட்டமைப்பை மாலத்தீவில் அறிமுகப்படுத்த தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் மாலத்தீவில் யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்ய முடியும்" என்றார்.
இதுபோக, மாலத்தீவில் உள்ள 28 தீவுகளில் குடிநீர் மற்றும் கழிவு நீர் மேலாண்மை திட்டங்களை ஜெய்சங்கரும் மாலத்தீவு அதிபரும் இணைந்து தொடங்கி வைத்தனர். அதே நேரத்தில் இந்த 28 தீவுகளிலும் வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள இந்தியாவுக்கு மாலத்தீவு அனுமதியும் கொடுத்துள்ளது.
மாலத்தீவு நாட்டை கைக்குள் போட்டுக்கொண்டு இந்தியாவுக்கு குடைச்சல் கொடுக்க சீனா திட்டமிட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் இந்தியா - மாலத்தீவு இடையே போடப்பட்டுள்ள பல முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சீனாவின் திட்டத்திற்கு செக் வைக்கும் விதமாகவே உள்ளது.












Click it and Unblock the Notifications