மாயமான மலேசிய விமானம் குறித்து துப்பு தந்தால் ரூ 30 கோடி பரிசு... பயணிகளின் உறவினர்கள் அறிவிப்பு
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானம் குறித்து துப்பு கொடுப்பவருக்கு ரூ.30 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் அறிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் 8-ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பயணிகளுடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது. அந்த விமானம் விபத்தில் சிக்கியதாக மலேசிய அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இந்தியப் பெருங்கடல் பகுதியில் பல்வேறு நாடுகளின் உதவியுடன் கடந்த 2 மாதங்களாக விமானத்தை தேடும் பணி நடத்தப்பட்டது. ஆனால், மாயமான விமானம் குறித்து இதுவரை எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே விமானம் மாயமான சம்பவத்தில் மலேசிய அரசு உண்மைகளை மறைப்பதாக அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
மறுப்பு...
இதனால் பயணிகள் இறந்ததாக மலேசிய அரசு தர முன்வந்த இறப்புச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ள அவர்கள் மறுத்து விட்டனர்.
சன்மானம்...
முன்னுக்குப் பின் வெளியாகும் முரணான தகவல்களால் குழப்பத்தில் ஆழ்ந்த பயணிகளின் உறவினர்கள், விமானம் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு சன்மானம் என அறிவித்துள்ளனர்.
கூட்டமைப்பு...
எனவே அவர்கள் ஓர் கூட்டமைப்பை உருவாக்கி மாயமான விமானம் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ 29 கோடியே 63 லட்சத்து ஐம்பதாயிரம் பரிசுத் தொகையை தர இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
நம்பிக்கை...
அதிக பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளதால், விமானம் குறித்த தகவல் கிடைக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்
தேடும் பரப்பளவு விரிவு...
இதற்கிடையே மலேசிய விமானத்தை தேடும் பரப்பளவு மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.