நேபாளத்தில் வாத்துக்கூட்டத்தில் மோதிய மலேசிய விமானம்... கண்ணாடி உடைந்தது
காத்மாண்டு: நேபாள் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வாத்துகள் மீது மோதியது. இதில் விமானத்தின் கண்ணாடி உடைந்துள்ளது.
ஆனால் இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பது போல நேபாள அதிகாரிகள் கமுக்கமாக இருந்துள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளது. ஏற்கனவே ஒரு மலேசிய விமானம் காணாமல் போய் பல நாட்களாகி, உலக நாடுகள் பலவும் ஒன்று கூடி கடல் கடலாக அலசி ஆராய்ந்து வரும் நிலையில் இன்னொரு மலேசிய விமானம் அபாயகரமான விபத்திலிருந்து தப்பியுள்ளது அனைவரையும் அதிர வைத்துள்ளது.
180 பயணிகள் மற்றும் சிப்பந்திகளுடன் மலேசியாவில் இருந்து கிளம்பிய மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 114 நேற்று முன்தினம் இரவு நேபாள் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது வாத்துக் கூட்டம் ஒன்று திடீரென குறுக்கே புகுந்துள்ளது. அவை விமானத்தின் வின்ட்ஷீல்டில் மோதியது. இதனால் விமனம் தரையிறங்கியபோது அதன் கண்ணாடிகள் உடைந்து ஓடுதளத்தில் சிதறின. இந்த விபத்தில் யாரும் காயம் அடையவில்லை.
இருப்பினும் விமான சிப்பந்திகள் இது குறித்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கவில்லை. மேலும் விமானிகளும் கூட தகவல் தராமல் கமுக்கமாக இருந்து விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து ஜெட் ஏர்வேஸ் சிப்பந்திகள் அதிகாரிகளிடம் தெரிவித்த பிறகே மலேசிய விமானத்தின் கேப்டன் விபத்து நடந்ததை உறுதி செய்தார். இதையடுத்து ஓடுதளத்தில் சோதனையிட்டபோது 10 வாத்துக்கள் இறந்து கிடந்ததும், கண்ணாடி துண்டுகள் கிடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவை ஓடுதளத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டன.
இதையடுத்து கோலாலம்பூருக்கு நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் ரிப்பேர் செய்யப்பட்ட பிறகு அதிகாலை 3.30 மணிக்கு கிளம்பியது.
ஏற்கனவே மலேசியாவில் இருந்து சீனா சென்ற விமானம் மாயமாகியுள்ள நிலையில் மற்றொரு விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.