மலேசிய விமானம் மாயமானது திட்டமிட்ட செயல்: நியூசிலாந்து புத்தகத்தில் திடுக் தகவல்
வெல்லிங்டன்: 239 பேருடன் சீனா புறப்பட்ட மலேசிய விமானம் மாயமானது விபத்து அல்ல அது வேண்டும் என்றே செய்யப்பட்டது என்று இன்னும் வெளிவராத புத்தகத்தின் ஆசிரியர்கள் இருவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங் கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. பின்னர் விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
தெற்கு இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றது.
100 நாட்கள்
விமானம் மாயமாகி 100 நாட்கள் ஆகியும், அதை 26 நாடுகள் தேடும்போதிலும் அது குறித்து இதுவரை எந்தவித தகவல் இல்லை. இந்நிலையில் விமானத்தை நிச்சயம் கண்டுபிடிப்போம் என்று மலேசிய அரசு உறுதி அளித்துள்ளது.
ஆசிரியர்கள்
நியூசிலாந்தைச் சேர்ந்த விமானியும், ஹாமில்டன் நகர கவுன்சிலருமான இவான் வில்சன் மற்றும் பத்திரிக்கையாளர் ஜியோப் டெய்லர் ஆகியோர் சேர்ந்து மாயமான மலேசிய விமானம் குறித்து குட்நைட் மலேசியன் 370: தி ட்ரூத் பிஹைன்ட் தி லாஸ் ஆஃப் பிளைட் 370 என்ற புத்தகத்தை எழுதியுள்ளனர். இந்த புத்தகம் இன்னும் வெளிவரவில்லை.
விபத்து
எம்.ஹெச். 370 விமானம் மாயமானது விபத்து அல்ல. அது வேண்டும் என்றே செய்யப்பட்டது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க வேண்டும். இந்த புத்தகத்தில் உள்ள தகவல்கள் விமானத்தில் பயணம் செய்வோருக்கு அதிர்ச்சி அளிக்கும் என்று புத்தகத்தின் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
மலேசியா
ஆசிரியர்கள் வில்சன் மற்றும் டெய்லர் ஆகியோர் மலேசியா சென்று அதிகாரிகள் மற்றும் மாயமான விமானத்தின் விமானி ஜஹரி அகமது ஷாவின் குடும்பத்தாரையும் பேட்டி கண்டுள்ளனர்.
மலேசிய அரசு
விமானம் மாயமானது குறித்து மலேசிய அரசு எதையோ மறைக்கிறது என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் வில்சன் மற்றும் டெய்லர் விமானம் மாயமானது விபத்து அல்ல என்று கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.