பொய்யர்கள், கொலைகாரப் பாவிகள்! - மலேசிய அரசு மீது சீன மக்கள் குற்றச்சாட்டு
பெய்ஜிங்: மலேசிய அரசு திட்டமிட்டு பல தகவல்களை மறைத்து பொய் சொல்கிறது. மதிப்பு மிக்க மனித உழைப்பை வீணடித்துவிட்டது. கொலைகாரப் பாவிகள், என்று சீன மக்கள் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளனர்.
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமாகி 17 நாட்கள் கடந்த நிலையில் நேற்று மாலைதான், விமானம் கடலுக்குள் விழுந்து மூழ்கிவிட்டது. 239 பேரும் இறந்துவிட்டனர் என்று மலேசிய அரசு அறிவித்தது.
இந்த 17 நாட்களும் உலகின் பல நாடுகள் பல கோடி ரூபாய் செலவழித்து இந்த விமானத்தைத் தேடி வருகின்றன. ஆனால் மலேசிய அரசோ முன்னுக்குப் பின் முரணான தகவல்களையும், தவறான தகவல்களையும் தந்து குழப்பிக் கொண்டிருந்தது.
நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் கூட, விமானம் எப்படி வழிமாறிப் போனது, அதன் பின்னணி என்ன... எப்படி விபத்துக்குள்ளானது என்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதா என எதையும் மலேசியப் பிரதமர் சொல்லவில்லை.
பொத்தாம் பொதுவாக, விமானம் தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டிருக்கலாம் என நம்புகிறோம். அத்தனை பேரும் இறந்திருக்கலாம். எனவே விமானத்தைத் தேடுவதை நிறுத்துகிறோம், என்று தெரிவித்தார்.
மலேசிய அரசின் இந்தப் போக்குதான் மலேசிய விமானத்தில் பயணித்தவர்களின் கோபத்தைக் கிளறியுள்ளது.

பொறுப்பில்லாத அரசு
'ஒரு பொறுப்பில்லாத அரசு இது. விமானம் மாயமான விஷயத்தில் அந்த நாட்டு பிரதமரும் அமைச்சர்களும் அதிகாரிகளும் ஒரு முறை கூட உண்மையான தகவலைத் தெரிவிக்கவில்லை. இப்போதும்கூட உறுதியாக எதையும் சொல்லவில்லை. விபத்து நடந்திருக்கலாம். அனைவரும் இறந்திருக்கலாம்.. தேடுவதை நிறுத்திவிட்டோம்,' என்பது பொறுப்பின்மையின் உச்சம். இவர்கள் பொய்யர்கள் மட்டுமல்ல, கொலைகாரர்கள். மலேசியா மீது நடவடிக்கை தேவை," என வெடித்திருக்கிறார்கள் உறவினர்களைப் பறிகொடுத்தவர்கள்.

வீணடிச்சிட்டாங்களே
சீன மக்களோ, மதிப்பு மிக்க மனித உழைப்பை இத்தனை நாட்களும் தெரிந்தே வீணடித்திருக்கிறது மலேசியா. இந்த பொறுப்பின்மைதான் இத்தனை உயிர்களைக் கொல்லக் காரணம். விமானம் காணாமல் போன அன்றைக்கு சிறு பதட்டத்தைக் கூட அந்த நாடு காட்டவில்லை," என குமுறியுள்ளனர்.

விபத்துக்கு ஆதாரம் என்ன?
'விபத்து நேர்ந்திருக்கலாம் என்றால் அதற்கான ஆதாரம் வேண்டாமா? எந்த ஆதாரமும் இன்று விபத்து என்று கூறி, தேடும் பணியை நிறுத்துவதன் காரணம் என்ன? மிகப் பெரிய குற்றத்தை மறைக்கிறதா மலேசியா' என்று சீனப் பத்திரிகை கேள்வி எழுப்பியுள்ளது.

மோசமான கொலைகாரர்கள்
மலேசிய அரசு, அந்த நாட்டு ராணுவம் வேண்டுமென்றே தேடுதல் பணியைத் தாமதப்படுத்தியுள்ளனர். தங்களுக்குக் கிடைத்த தகவல்களை எந்த நாட்டுடனும் பகிர்ந்துக் கொள்ளவில்லை. உலகின் மிக மோசமான கொலைகாரர்கள் மலேசிய அரசும் அந்த நாட்டு ராணுவமும்தான் என சீனாவின் அரசு தொலைக்காட்சி குற்றம்சாட்டியுள்ளது.

ஒரு துரும்பு கூட கிடைக்கலியே..
மலேசிய விமானம் குறித்து எந்தத் தகவலும் இல்லை. விபத்து என்பதற்கோ, பயணிகள் இறந்ததற்கோ ஒரு துண்டு ஆதாரமும் கிடைக்கவில்லை. பின்னர் எதை வைத்து இதை விபத்து என ஒரு நாட்டின் பிரதமர் அறிவித்திருக்கிறார்... நஷ்ட ஈட்டை அந்த நாடு அறிவித்துள்ளது, என விமானத்தில் பயணித்த சீனப் பயணிகள் 154 பேரின் உறவினர்களின் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

தேடல் தொடர்கிறது
விமானத்தைத் தேடும் பணியை மலேசியா நிறுத்தினாலும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தொடரத் திட்டமிட்டுள்ளன. விமானம் விழுந்ததாகச் சொல்லப்படும் கடல் பகுதியில் இதுவரை மனிதர்கள் அல்லது கப்பல்கள் செல்லாத இடங்களில் ஒன்று என்பதால், அந்தப் பகுதியின் கால நிலையைக் கணித்து அதற்கேற்ப தேடலைத் தொடரப் போகிறார்களாம்.












Click it and Unblock the Notifications