மலேசியா விமான விபத்து: சென்னை பெண் பலி?
கோலாலம்பூர்: வியட்நாம் அருகே விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 5 இந்தியர்களில் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சந்திரிகாசர்மா என்பவரும் ஒருவர். எனவே அவர் இந்த விபத்தில் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி மலேசிய அரசுக்கு சொந்தமான போயிங் 777-200 ரக விமானம் இன்று அதிகாலை புறப்பட்டது.
காலை 6.30 மணியளவில் பீஜிங் சென்றடையும் என எதிர்பார்க்கப்பட்ட அந்த விமானம் புறப்பட்டு சென்ற சுமார் 2 மணி நேரத்துக்குள் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது.

இதனால் பதற்றமடைந்த கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அந்த விமானம் தொடர்பு எல்லைக்குள் இருந்து மாயமாகி விட்டதாக அறிவித்தனர்.
கடலில் விழுந்த விமானம்
இதற்கிடையில், வியட்நாமின் தோ சூ தீவில் இருந்து 153 மைல் தொலைவில் உள்ள தென் சீனக் கடலுக்குள் அந்த விமானம் விழுந்து விட்டதாக வியட்நாம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால், விமானத்தில் இருந்த 239 பயணிகளின் கதி என்ன ஆயிற்று? என்ற அச்சமும், கவலையும் ஏற்பட்டுள்ளது.
5 இந்தியர்களின் கதி?
இந்த விமானத்தில் 5 இந்தியர்களும் பயணித்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அவர்களின் பெயர்கள் சேத்னா கொலேகர், சுவனந்த் கொலேகர், சுரேஷ் கொலேகர், பிரகலாத் ஷிர்சதா, சந்திரிகா ஷர்மா என தெரிய வந்துள்ளது. கனடாவில் வாழும் இந்திய வம்சாவழியினரான குக்தேஷ் முகர்ஜியும் இந்த விமானத்தில் சென்றுள்ளார்.
சென்னைப் பெண்
விபத்துக்குள்ளான விமானத்தில் சென்னையைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் உறுப்பினர் சந்திரிகா சர்மா (51) பயணித்தது தெரியவந்துள்ளது.
இதனால் வேளச்சேரியில் உள்ள அவரது குடும்பத்தினர் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விமான விபத்து குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருப்பதாக மட்டும் தெரிவித்துள்ளனர்.
சந்திரிகா சர்மா ஹரியானாவைச் சேர்ந்தவர். சென்னையில் வேளச்சேரியில் கணவருடன் வசித்து வந்தார். அவர்களுக்கு கல்லூரி படிக்கும் ஒரு மகள் இருக்கிறார்.
மங்கோலியாவில் நடைபெறும் ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக அவர் மலேசியாவில் இருந்து பீஜிங் செல்லும் விமானத்தில் பயணித்ததாக கூறப்படுகிறது.
விமானத்தில் இருந்த 239 பேரும் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் பிராத்தனை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications