விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம்... விசாரணை குழுக்களை உக்ரைனுக்கு அனுப்பியது மலேசியா
கோலாலம்பூர்: 295 பேருடன் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த விசாரணை குழு ஒன்று சிறப்பு விமானத்தில் உக்ரைன் விரைந்ததுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் நஜிப் ராசக் தெரிவித்துள்ளார்.
நேற்று மதியம் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17, உக்ரைனில் ரஷ்ய எல்லைக்கு அருகே செல்கையில் ரஷ்ய ராணுவத்தின் ஆதரவுப் படை தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இதையடுத்து விமானம் ஷக்தர்ஸ்க் என்ற இடத்தில் தரையில் விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தில் பயணம் செய்த 280 பயணிகள் மற்றும் 15 சிப்பந்திகள் என 295 பேரும் உடல் கருகி பரிதாபமாகப் பலியானார்கள். இத்தகவலை உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பற்றி மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இதுபற்றி உடனடி விசாரணையை தொடங்கி விட்டதாகவும் அவர் சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘மலேசியா அரசு உக்ரைனுக்கு சிறப்பு விமானம் ஒன்றை அனுப்பியுள்ளது. மலேசியா பேரழிவு உதவி மற்றும் மீட்பு குழு, மருத்துவ குழு அந்த விமானத்தில் சென்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரோசென்கோவிடம் பேசியுள்ளதாக தெரிவித்துள்ள நஜிப் ரசாக், முழு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக அவர் உறுதி அளித்துள்ளதாக கூறியுள்ளார். அதேபோல், மலேசியா விசாரணை குழு உக்ரைன் விரைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்களிடம் உக்ரைன் அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என்று உக்ரைன் அதிபர் பெட்ரோ உறுதி செய்துள்ளார் என்றும் மீட்பு பணிக்கு உத்தரவிட்டுள்ளார் என்றும் மலேசியா பிரதமர் நஜிப் ரசாக் அப்போது கூறினார்.
இதற்கிடையே, அந்த விமானத்தில் இருந்த பயணிகளில் 23 அமெரிக்கர்களும் அடங்குவர் என்று தெரிய வந்துள்ளது. விமானத்தை ரஷிய படைகள்தான் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது. இரண்டு நாட்டு அரசுகளும் கிளர்ச்சியாளர்களே பொறுப்பு என்று தெரிவித்துள்ளது.