"மனதார சொல்கிறேன்.. ரொம்ப ரொம்ப நன்றி.." இந்தியா செய்த உதவி.. நெகிழ்ந்து போன மாலத்தீவு அமைச்சர்
மாலத்தீவு: மாலத்தீவுக்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதி தரப்பட்டுள்ள நிலையில், இதற்கு இந்தியாவுக்கு அந்நாட்டு அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
மாலத்தீவு அதிபராக முகமது முய்சு தேர்வானதில் இருந்தே இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு தான். ஏனென்றால் அவர் சீன ஆதரவு நிலைப்பாடு கொண்டவர். இதனால் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையே தொடர்ந்து எடுத்து வந்தார்.

அந்நாட்டு அமைச்சர்கள் இந்தியப் பிரதமர் மோடியை விமர்சித்ததும் சர்ச்சையானது. இப்படி மோதல் போக்கு நிலவி வந்தாலும் மாலத்தீவுக்கு உதவும் வகையில் அத்தியாவசிய பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி அளித்துள்ளது.
மாலத்தீவுக்கு உதவி: சர்க்கரை, கோதுமை, அரிசி , வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மாலத்தீவுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி அளித்துள்ளது. மேலும், 1 மில்லியன் டன் ஆற்று மணல் மற்றும் கற்கள் ஏற்றுமதிக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது.. மாலத்தீவில் அத்தியாவசிய பொருட்களுக்கான தேவை அதிகரித்த நிலையில், இந்தியா சரியான நேரத்தில் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது.
தக்க நேரத்தில் உதவிய இந்தியாவுக்கு மாலத்தீவு அமைச்சர் ஜமீர் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் ஜமீர், "2024-2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய மாலதீவுகளுக்கு ஒதுக்கீட்டைப் புதுப்பித்ததற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்திய அரசுக்கு நான் மனப்பூர்வமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.. இது உண்மையிலேயே நல்ல ஒரு சமிக்கை.. நீண்டகால நட்பைக் குறிக்கிறது, இருதரப்பு வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்த வலுவான அர்ப்பணிப்பை நமது இரு நாடுகளுக்கு இடையே உள்ளது" என்றார்.
அமைச்சர் ஜெய்சங்கர்: இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலும் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "வெல்கம் ஜமீர்.. இந்தியாவைப் பொறுத்தவரை அண்டை நாடுகளுக்குத் தான் முன்னுரிமை தருவோம். அதில் இந்தியா உறுதியாக இருக்கிறது" என்றார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு Neighbourhood First policy என்ற கொள்கையைப் பின்பற்றி வருகிறது. அதன்படி அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூட்டான், மாலத்தீவு, மியான்மார், நேபாளம், பாகிஸ்தான் இலங்கை ஆகிய நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.. இந்த பிராந்தியம் முழுக்க உள்ள மக்களிடையே தொடர்பை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
முதல்முறை இல்லை: மேலும், மாலத்தீவுக்கு இந்தியா இதுபோல அத்தியாவசிய பொருட்களை அனுப்புவது இது முதல்முறை இல்லை. கடந்த 1981ஆம் ஆண்டு முதலே இந்தியா மாலத்தீவுக்கு இதுபோல அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வருகிறது. ஆனால், கடந்த 44 ஆண்டுகளில் இந்தியா மாலத்தீவுக்கு அதிகபட்ச பொருட்களை அனுப்புவது இந்தாண்டு தான்.
உதவிகள்: மாலத்தீவில் வளர்ச்சியில் அங்கே தொடர்ந்து நடக்கும் கட்டுமான பணிகளும் ரொம்பவே முக்கியம். இந்த ஆற்று மணல் மற்றும் கற்கள் ஏற்றுமதி 25 சதவீதம் அதிகரித்து 1,000,000 மெட்ரிக் டன்களாக உள்ளது. இது தவிர முட்டை, உருளைக்கிழங்கு, வெங்காயம், சர்க்கரை, அரிசி, கோதுமை மாவு மற்றும் பருப்பு ஆகியவற்றின் ஒதுக்கீடும் 5 சதவீதம் அதிகரித்துள்ளது.
உள்நாட்டில் தேவை என்பால் கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து இந்த பொருட்களை ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், மாலத்தீவுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுத் தொடர்ந்து அரிசி, சர்க்கரை மற்றும் வெங்காயத்தை இந்தியா அனுப்பி வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications