மாலி: கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில்.. பாதுகாப்புத்துறை அமைச்சர் பலி! உச்சக்கட்ட பதற்றம்
பமாக்கோ: மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் தற்போது உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. நேற்று முன்தினம் கிளர்ச்சியாளர்கள் நடந்திய தாக்குதலில், அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கொல்லப்பட்டார். இதுவே இந்த பதற்றத்திற்கு காரணமாகும்.
மாலியின் தற்போதைய ராணுவ அரசாங்கத்தில் மிக முக்கியப் பொறுப்பில் இருந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெனரல் சாடியோ காமாரா, நேற்று முன்தினம் தலைநகர் பமாக்கோவிற்கு அருகிலுள்ள கதி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

எப்படி நடந்தது?
குண்டு நிரப்பப்பட்ட கார், அமைச்சரின் வீட்டின் மீது மோதி வெடித்து சிதறியது. இதில் அமைச்சர் மற்றும் அவரது இரண்டாவது மனைவி, 2 பேரக்குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இது அமைச்சரை மட்டும் குறிவைத்த தாக்குதல் அல்ல. மாறாக, தலைநகர் பமாக்கோ விமான நிலையம், மோப்தி, சேவாரே மற்றும் காவ் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட பெரும் தாக்குதல்களின் ஒரு பகுதியாகும்.
யார் செய்தது?
இந்தத் தாக்குதல்களை அல்கொய்தாவுடன் தொடர்புடைய JNIM அமைப்பும், துவாரெக் கிளர்ச்சியாளர்களின் கூட்டமைப்பான அசாவாத் விடுதலை முன்னணி (FLA) அமைப்பும் இணைந்து மேற்கொண்டுள்ளன. கிளர்ச்சியாளர்களும் ஜிஹாதி அமைப்புகளும் இவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுவது இதுவே முதல்முறை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்
இந்த தாக்குதல் காரணமாக, வடக்கு மாலியின் மிக முக்கியமான நகராகக் கருதப்படும் கிடால், மீண்டும் கிளர்ச்சியாளர்களின் கைக்குச் சென்றுள்ளது. முன்னர் இந்த நகரம் மாலி ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. ராணுவத்திற்கு ரஷ்யாவின் ஆப்பிரிக்கா கார்ப்ஸ் (முன்னாள் வாக்னர் குழு) உதவி செய்து வந்தது. ஆனால், தற்போது இந்த நகரம் முழுமையாக கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
கிடால் இப்போது சுதந்திரமாக உள்ளது என FLA கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். அடுத்ததாக காவ் (Gao) மற்றும் டிம்பக்டு (Timbuktu) நகரங்களைக் கைப்பற்றுவதே நோக்கம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
பதிலடி கொடுப்போம்
கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை தொடர்ந்து, தலைநகர் பமாக்கோவில் இரவு நேர ஊரடங்கு (21:00 முதல் 06:00 வரை) அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ராணுவச் சோதனைச் சாவடிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் மற்றும் ஆப்பிரிக்க யூனியன் இந்தத் தாக்குதல்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த வன்முறைக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என மாலி ராணுவம் சூளுரைத்துள்ளது.












Click it and Unblock the Notifications