பயங்கர சத்தம்! திடீரென வெடித்துச் சிதறிய 2ஆம் உலக போரின் வெடிகுண்டு..செக் குடியரசில் மோசமான விபத்து
பிராக்: செக் குடியரசு நாட்டில் 2ஆம் உலகப் போர் சமயத்தில் வீசப்பட்ட வெடிகுண்டு திடீரென வெடித்துச் சிதறியது.
உலக வரலாற்றில் இப்போது வரை மிக மோசமான போராக அறியப்படுவது 2ஆம் உலகப் போர். ஹிட்லரின் நாஜி படைகளைத் தடுத்து நிறுத்த ஒட்டுமொத்த உலக நாடுகளும் திரண்டு வர வேண்டி இருந்தது.
1939ஆம் ஆண்டு தொடங்கிய இந்தப் போர் 1945ஆம் ஆண்டு வரை நீடித்தது. இந்தப் போரில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

செக் குடியரசு
போர் முடிந்து இப்போது 78 ஆண்டுகள் ஆகும் நிலையில், இப்போது கூட அந்த போர் ஒருவர் உயிரிழக்கக் காரணமாக இருந்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா? இரண்டாம் உலகப் போர் சமயத்தில் வீசப்பட்டு, வெடிக்காமல் இருந்த ஒரு வெடிகுண்டை அகழ்வாராய்ச்சி சமயத்தில் நீக்க முயன்ற போது அது எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது. இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஒருவர் காயமடைந்தார்.

வெடித்து சிதறியது
செக் குடியரசின் கிழக்குப் புறத்தில் அமைந்துள்ள நகரங்களில் ஒன்றான ஆஸ்ட்ராவா கடந்த சில நாட்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர், 2ஆம் உலகப் போர் சமயத்தில் வீசப்பட்டு வெடிக்காமல் இருந்த வெடிகுண்டை எடுக்க முயன்ற சமயத்தில் எதிர்பாராத விதமாக அது திடீரென வெடித்துச் சிதறியது. இந்தச் சம்பவத்தில் ஒருவர் நிகழ்விடத்திலேயே கொல்லப்பட்டார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

போலீசார்
உயிரிழந்தவர் வெடிகுண்டைப் பழைய கழிவுநீர்க் குழாயாக கருதி இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் மேலும் கூறுகையில், "அவர் உலோகத்தை வெட்ட முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாகக் குண்டு வெடித்துச் சிதறியது" என்றனர். மேலும், இது வான்வழியில் இருந்து வீசப்பட்ட வெடிகுண்டு என்பதையும் போலீசார் கண்டறிந்தனர்.

மக்கள் வெளியேற்றம்
இந்தச் சம்பவத்தில் 49 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 31 வயதுடைய நபருக்குத் தலையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காகக் குண்டு வெடித்துச் சிதறிய இடத்தில் இருந்து 300 மீட்டருக்குள் அமைந்துள்ள வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.

2ஆம் உலகப் போர்
இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் வீசப்பட்டு, வெடிக்காமல் இருக்கும் வெடிமருந்துகள் மற்றும் குண்டுகள் கண்டறிவது இது முதல்முறை இல்லை. 1945ஆம் ஆண்டு வடகிழக்கு செக் குடியரசு பகுதியில் ரஷ்யப் படைகள் இந்த வழியில் தான் முன்னேறியது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு மட்டும், 2ஆம் உலகப் போர் சமயத்தில் வீசப்பட்டு வெடிக்காமல் இருந்த குண்டுகள் காரணமாக மூன்று முறை பொதுமக்கள் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications