ஒன்றரை வயது குழந்தையைச் சுட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற அமெரிக்கத் தந்தை
வாஷிங்டன்: குடும்பத்தகராறு காரணமாக தனது ஒன்றரை வயது மகளைத் துப்பாக்கியால் சுட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்ற அமெரிக்க நபர், தற்கொலைக்கு முந்தைய தருணங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவின், கொலராடோ பகுதியைச் சேர்ந்த 22 வயதான மெர்ரிக் மேக்கோய்க்கும், அவரது மனைவிக்கும் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக தனது ஒன்றரை வயது பெண் குழந்தையை மெர்ரிக்கிடம் விட்டுவிட்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார் அவரது மனைவி.
மனைவியின் பிரிவால் மனமுடைந்து போன மெர்ரிக், தானும் தனது குழந்தையும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். அதன் பின்னர், தனது மனைவிக்கு அவர் ஒரு செய்தி அனுப்பியுள்ளார். அதில், 'நீ இல்லாமல் என்னால் வாழமுடியாது என நான் உன்னிடம் கூறியிருக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மெர்ரிக்கின் வீட்டில் இருந்து துப்பாக்கிச் சத்தம் கேட்பதாக அவரது அக்கம்பத்தார் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் போலீசார். வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, மெர்ரிக்கும், அவரது பெண் குழந்தையும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்கள் இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்து விட்டதை உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து உயிருக்கு போராடிய மெர்ரிக்கிற்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
இந்நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் மெர்ரிக் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாலேயே அவரது மனைவி வீட்டை விட்டு வெளியேறியது தெரிய வந்துள்ளது.