எமிரேட்ஸ் விமானத்தில் பெண் சிப்பந்தியை முகத்திலேயே குத்திய பயணியால் பரபரப்பு
துபாய்: துபாயில் இருந்து மெல்போர்ன் கிளம்பிய விமானத்தில் பயணி ஒருவர் பெண் சிப்பந்தியை முகத்தில் குத்தியுள்ளார்.
எமிரேட்ஸ் விமானம் ஒன்று இன்று அதிகாலை துபாயில் இருந்து ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகருக்கு கிளம்பியது. அந்த விமானத்தில் பயணம் செய்த ஒருவர் படுத்து தூங்குவது தொடர்பாக பெண் சிப்பந்தியிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இந்நிலையில் அவர் அந்த பெண்ணை துரத்திச் சென்று முகத்தில் பலமுறை குத்தியுள்ளார்.
இதை பார்த்த சக பயணிகள் 3 பேர் ஓடி வந்து அந்த நபரை அமுக்கிப் பிடித்து இருக்கையோடு கட்டி வைத்துள்ளனர். இதனால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து அந்த நபரை இருக்கையோடு கட்டி வைக்க உதவியவர்களில் ஒருவரான மேட் நைலர் கூறுகையில்,
அந்த பயணிக்கு 10 ஆண்களின் பலம் இருந்தது. அவர் எமர்ஜென்சி எக்சிட்டுக்கு அருகில் சென்று நின்றதும் ஏதாவது செய்துவிடுவாரோ என்று பயந்தோம். அந்த நபருக்கு கோபம் அதிகமாக இருந்தது. தண்ணீர் கொடுக்க வந்த சிப்பந்தியை கூட தலையால் முட்டித் தள்ளினார். யார் பேசுவதையும் அவர் கேட்கத் தயாராக இல்லை. அவருடன் அழகான சிறுவன் வந்திருந்தான்.
இந்த சம்பவத்தை சிப்பந்திகள் சிறப்பாக கையாண்டனர் என்றார்.