மாஜி மனைவி ஆசிட் வீசி கொலை.. கணவருக்கு 117 ஆண்டு சிறை - ரூ. 10 லட்சம் அபராதம்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் முன்னாள் மனைவி மீது ஆசிட் வீசிக் கொலை செய்த வழக்கில் கணவருக்கு 117 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.
பாகிஸ்தானின் முல்தான் நகரை சேர்ந்தவர் ஜவேதன் பிபி. இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவர் அம்ஜத்தை விட்டுப் பிரிந்தார். விவாகரத்திற்குப் பின் முகமது ரியாஸ் என்பவரை மணந்தார் ஜவேதன் பிபி.
இதனால் ஜவேதன் மீது ஆத்திரத்தில் இருந்தார் அம்ஜத். தன்னை விவகாரத்து செய்து விட்டு வேறொருவரை திருமணம் செய்த பிபிக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என அவர் முடிவு செய்தார்.

அதன்படி, கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிபி வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த அம்ஜத் படுக்கை அறையில் ஒன்றாக இருந்த பிபி மற்றும் அவரது கணவர் ரியாஸ் மீது ஆசிட் வீசி விட்டு தப்பினார்.
இதில், பலத்த காயமடைந்த பிபி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ரியாசுக்கும் மார்பு மற்றும் கழுத்தில் காயம் ஏற்பட்டது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அம்ஜத்தை கைது செய்தனர். முல்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது அம்ஜத் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
விசாரணையின் முடிவில் நேற்று முன்தினம் இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அம்ஜத்துக்கு 117 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 10 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications