மன்மோகன்சிங் ரஷிய பயணம் - கூடங்குளம் 3, 4வது அணு உலைக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை!
மாஸ்கோ: பிரதமர் மன்மோகன்சிங்கின் ரஷிய பயணத்தின் போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கூடங்குளம் 3,4வது அணு உலைகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. அணு உலை விபத்து இழப்பீடு யாருடைய பொறுப்பு என்பதில் இரு தலைவர்களும் ஒருமித்த கருத்தை எட்டாததால் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.
பிரதமர் மன்மோகன்சிங் 3 நாள் பயணமாக ரஷியா சென்றார். அவர் மாஸ்கோவில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசினார். அப்போது ராணுவம், தொழில்நுட்பம், பொருளாதாரம் உள்பட பல்வேறு நிலைகளில் இரு நாடுகளும் நட்புறவுடன் செயல்பட்டு வருகிறது. இப்போது இந்தியாவில் நடைபெற்று வரும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளிலும் கூட இரு நாடுகளும் இணைந்தே செயல்பட்டு வருகிறது என்றார் புதின்.

பிரதமர் மன்மோகன்சிங் பேசுகையில், ரஷியா உறவின் மீது நாங்கள் வைத்துள்ள நம்பிக்கை, உறுதி வேறு எந்த நாடுகளுடனும் எங்களுக்கு இருந்ததில்லை. எனவே ரஷியா எங்களுக்கு ராஜிய உறவு நாடு என்பதை நான் மீண்டும் உறுதி செய்கிறேன். இருநாட்டு உறவுகளில் மட்டுமல்லாது உலக பிரச்சினைகள், பிராந்திய பிரச்சினைகளிலும் இது மேலும் தொடர்ந்து வளரும் என்றார்.
ரஷிய உதவியுடன் கூடங்குளத்தில் ஏற்கெனவே 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் இந்த சந்திப்பில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் இழப்பீடு யார் வழங்குவது என்பது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இதனால் இந்த அம்சத்தில் உடன்பாடு ஏற்பட்ட பின்னரே கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
அதாவது 3, 4-வது அணு உலைகள் தொடர்பான இழப்பீடு சட்டப் பிரச்சினைகள் தான் என்று தெரிகிறது. உலைகளை இயக்குவது இந்தியா என்பதால் அந்த பிரச்சினைகள் இந்தியாவை சார்ந்தது தான் என்று ரஷியா தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. விபத்து ஏதேனும் ஏற்பட்டால் தங்களுக்கு பொறுப்பு ஏதுமில்லை என்பதுதான் ரஷியாவின் நிலைப்பாடாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications