செவ்வாய் கிரகத்தில் 'சிலந்தி வலை'! இதென்ன புதுசா இருக்கே! உயிர்கள் வாழ வாய்ப்பு இருக்கிறதா?
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்துக்கொண்டிருக்கும் நாசாவின் கியூரியாசிட்டி ரோவர், சிலந்தி வலை போன்ற ஒன்றை கண்டுபிடித்திருக்கிறது. இதனையடுத்து இது தொடர்பான ஆய்வுகளை விஞ்ஞானிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கியூரியாசிட்டி ரோவர், செவ்வாய் கிரகத்தில் உள்ள மவுண்ட் ஷார்ப் அடிவாரத்தில், ஒரு பாறையின் மேற்பரப்பில், இந்த வினோதத்தை கண்டறிந்துள்ளது. இது பூமியில் காணப்படும் சில குகைகள் அல்லது பாறைப் பரப்புகளில் உள்ள படிக வடிவங்கள், கனிமப் படிமங்களை போன்று இருக்கிறது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், ஒரு காலத்தில் நீர் பாய்ந்த அல்லது நீர் நிறைந்த பகுதிகளில்தான் இதுபோன்று இருக்கும். பூமியில் உள்ள எல்லா குகைகளிலும் இதுபோன்ற அமைப்பு இருக்காது. நீர் நிலைக்கு அருகில் உள்ள, அல்லது நீர் உள்ள குகைகளில்தான் இது இருக்கும். அப்படியெனில் செவ்வாய் கிரகத்தில் நீர் இருக்கிறதா? என்று கேள்வி எழுந்திருக்கிறது.
இப்போது செவ்வாய் கிரகத்தில் நீர் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டாலும், ஒரு காலத்தில் அதிக அளவில் இங்கு நீர் இருந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கிறது என்பதை இந்த வலை போன்ற அமைப்பு உறுதி செய்திருக்கிறது.
இது செவ்வாய் கிரகத்தில் நுண்ணுயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருந்ததா என்பதைப் பற்றிய ஆய்வுகளுக்கு உதவும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த வலை, சில குறிப்பிட்ட கனிமங்களால் உருவாகியிருக்கலாம். இந்த கனிமங்களின் கலவையை ஆய்வு செய்வதன் மூலம், செவ்வாய் கிரகத்தின் புவியியல் வரலாறு மற்றும் அங்குள்ள நிலத்தடி நீர் எவ்வாறு செயல்பட்டது என்பதைப் பற்றி மேலும் நம்மால் தெரிந்துக்கொள்ள முடியும்.
அதேபோல எதிர்காலத்தில் மனிதர்கள் செவ்வாய் கிரகத்திற்கு போகிறார்கள் எனில், அந்த பயணத்திற்கு இது மிகுந்த முக்கியத்துவம் கொண்டிருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
எதிர்காலத்தில் ஏதாவது ஒரு பெரிய விண்கல் பூமியை தாக்கலாம். அப்போது பூமி பேரழிவை சந்திக்க நேரலாம். எனவே, இதற்கு மாற்றாக நாம் இன்னொரு கிரகத்தை கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது. அந்த வகையில் நமக்கு பக்கத்தில் இருக்கும் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வருகிறோம். இங்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நீர் இருந்தது என்றும், ஆனால் அவை பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வற்றிவிட்டது எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதற்கு காரணம், செவ்வாய் கிரகத்தின் காந்த புலன் இழப்பு என்று சொல்லப்படுகிறது. காந்தபுலத்தை செவ்வாய் கிரகம் இழந்த பின்னர், அதன் வளிமண்டலம் முழுவதுமாக செயலிழந்து போய் இருக்கிறது. இதனால் சூரிய ஒளி செவ்வாய் கிரகத்தை முழுமையாக ஆக்கிரமித்திருக்கிறது. அதேபோல கிரகத்தில் இருந்த நீர் ஆவியாக விண்வெளிக்கு சென்றிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
எனவே செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வது என்பது, எதிர் காலத்தில் பூமியில் ஏற்படும் மாற்றங்களை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான படிப்பினையாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications