ஒரு ஓட்டில் தோற்ற வாஜ்பாய்.. உங்களை போல் இல்லை.. இம்ரான்கானை விளாசிய நவாஸ் ஷெரீப் மகள்
இஸ்லாமாபாத்: இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் ஒப்பிட்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை, நவாஸ் ஷெரீப் மகள் மர்யம் நவாஸ் ஷெரீப் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. இந்நிலையில் திடீரென்று சொந்த கட்சியின் எம்பிக்கள், கூட்டணி கட்சியினர் இம்ரான்கானுக்கு எதிராக செயல்பட துவங்கினர்.
இம்ரான்கானுக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இதனால் இம்ரான் கான் பெரும்பான்மையை இழந்தார். அவர் மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.

நம்பிக்கையில்லா தீர்மானம்
இந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற இருந்தது. ஆனால் இம்ரான்கான் தந்திரமாக செயல்பட்டு வாக்கெடுப்பை நடத்த விடாமல் துணை சபாநாயகர் மூலம் தடுத்தார். மேலும் அதிபர் உதவியுடன் நாடாளுமன்றத்தை கலைத்தார். இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவர்கள் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தை நாடினர். இந்நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான ஓட்டெடுப்பை இன்று நடத்த உத்தரவு பிறப்பித்தது. அதன்படி பாகிஸ்தானில் நாடாளுமன்றம் கூடியுள்ளது.

இம்ரான்கான் உரை
முன்னதாக நேற்று இம்ரான்கான் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் இந்தியா குறித்து பெருமையாக பேசினார். அவர் பேசுகையில், ‛‛உச்சநீதிமன்றம உத்தரவு அதிர்ச்சி அளிக்கிறது. இருப்பினும் அதை ஏற்கிறேன். ஓட்டெடுப்பையொட்டி எதிர்க்கட்சிகள் குதிரை பேரம் நடத்துகின்றன. ஆடுகளை போல எம்பிக்களை விலைக்கு வாங்குகின்றனர். பாகிஸ்தானை வெளிநாட்டு சக்தி கட்டுப்படுத்துகிறது. அதன் உத்தரவுப்படியே எல்லாம் நடக்கிறது.

சுயமரியாதை கொண்ட இந்தியர்கள்
இது 22 கோடி மக்களை கொண்ட பாகிஸ்தானுக்கு அவமானகரமானது. நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது. வெளிநாட்டு சக்திகளுக்கு பாகிஸ்தான் எதிர்கட்சிகள் விலை போய்விட்டன. எங்கள் நாட்டை கட்டுப்படுத்தும் வல்லரசால் இந்தியாவிடம் எதுவும் சொல்ல முடியாது. இந்தியாவை கட்டுப்படுத்தும் தைரியம் வல்லரசுக்கு இல்லை. இந்தியர்கள் சுயமரியாதை கொண்டவர்கள்'' என பேசியிருந்தார்.

மர்யம் நவாஸ் ஷெரீப் விமர்சனம்
இம்ரான்கானின் இத்தகைய பேச்சை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகளும், பிஎம்எல் (என்) கட்சியின் துணை தலைவருமான மர்யம் நவாஸ் ஷெரீப் கண்டித்துள்ளதோடு, விமர்சனமும் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியள்ளதாவது:

முதல்முறையாக பார்க்கிறேன்
‛‛பதவி பறிபோன பிறகு மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசுவதாக யாராவது அவரிடம் (இம்ரான்கான்) எடுத்து கூறுங்கள். அவரை வேறு யாரும் பதவியில் இருந்து நீக்கவில்லை. சொந்த கட்சியினர் தான் பதவியில் இருந்து அகற்றி உள்ளனர் என்பதை புரிய வையுங்கள். இந்தியா ரொம்ப பிடிக்கும் என்றால் இம்ரான்கான் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி அங்கு செல்லலாம். பதவி பறிபோன பிறகு ஒருவர் இப்படி அழுது புலம்புவதை நான் பார்த்தது இல்லை. முதல்முறையாக இப்போது தான் பார்க்கிறேன்.

வாஜ்பாய் போல் நீங்கள் இல்லை
இந்தியாவின் பல்வேறு பிரதமர்களுக்கு எதிராக 27 நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. இருப்பினும் எந்த பிரதமரும் நாட்டின் அரசியலமைப்பு, ஜனநாயகம் மற்றும் நீதிநெறியுடன் விளையாடியது இல்லை. வாஜ்பாய் ஒரு ஓட்டில் தோல்வியடைந்து வீட்டுக்கு சென்றார். ஆனாலும் அவர் உங்களை போன்று நாடு, அரசியலமைப்பு மற்றும் மக்களை பணயம் வைக்கவில்லை'' என கடுமையாக விமர்சித்து இருந்தார்.












Click it and Unblock the Notifications