சாதாரண மக்களின் அசாதாரணத் தலைவி ஜெயலலிதா!- டாக்டர் ராஜன்
வாஷிங்டன்: சாதாரண மக்களின் அசாதாரண தலைவியாகத் திகழ்ந்தவர் முதல்வர் ஜெயலலிதா என்று மேரிலாண்ட் மாகாண போக்குவரத்து ஆணையர் டாக்டர் ராஜன் நடராஜன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில், மேரிலாண்ட் மாநிலத்தின் வெளியுறவுத் துறை துணைச் செயலராக கவர்னர் ஓமேலி அரசில், 2011 முதல் 2014 வரை அங்கம் வகித்து, பின் தற்போது அம்மாநில போக்குவரத்து ஆணையராகப் பணிபுரியும் டாக்டர் ராஜன் நடராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:

செல்வி. ஜெயலலிதா அவர்களின் மறைவு குறித்து மிகுந்த வருத்தமுற்றேன். செல்வி ஜெயலலிதா சாதாரண மக்களுக்காகப் பாடுபட்ட ஒரு அசாதாரணத் தலைவி ஆவார். ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரம் உயர, அவருடைய அர்ப்பணிப்பு மகத்தானது. அம் மக்களின் மேம்பாட்டிற்காகவும் ஒட்டுமொத்த தமிழகத்தின் மேம்பட்டிற்காகவும் அவர் தொலைநோக்குப் பார்வையுடன் பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொண்டார்.
இத்தகைய திட்டங்களை வேற்று மாநில முதல்வர் எவரும் கொண்டு வர இயலவில்லை என்பதே உண்மை. செல்வி. ஜெயலலிதா ஏழை எளியவர்களின் ஏழ்மை நிலையைப் போக்குவதே தம் வாழ்வின் இலட்சியமாக மேற்கொண்டிருந்தார். அவர்களின் கனவுகளை நனவாக்க அரும்பாடு பட்டார். அவர், எளியவர்களின் ஒளிவிளக்காக அவர்களுக்குப் பெரும் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார் என்றால் அது மிகையாகாது.
ஜெயலலிதா ஒரு இரும்பு போன்ற திண்ணம் கொண்ட ஈடு இணையற்ற தலைவி. மகளிர் சக்தி என்பதன் அடயாளச் சின்னம். பெண்கள் முன்னேற்றத்திற்காக அரும்பாடு பட்டவர்.
தமக்குக் குழந்தகள் இல்லையென்றாலும், இலட்சக் கணக்கான ஏழைக் குழந்தைகளின் தாயாக விளங்கியவர். அதுமட்டுமன்றி, அனைத்துத் தர மக்களால் 'அம்மா' என்று அன்போடு அழைக்கப் பட்டவர். "மக்களால் நான்; மக்களுக்காக நான்" என்ற தாரக மந்திரத்தினை உதிர்த்துக் கொண்டிருந்தவர்.
எண்ணத்தில் அடங்காத ஒரு சகாப்தம் முடிவடைந்தது. "எதையும் தாங்கும் இதயம்" என்ற அறிஞர் அண்ணாவின் பொன்மொழிக்கேற்பத் திகழ்ந்தவர். அவருடைய துணிச்சல், தொலைநோக்குப் பார்வை, நினைத்ததை சாதிக்கும் தன்னம்பிக்கை மூலம், தமிழக அரசியில் மட்டுமன்றி, இந்திய அரசியல் களத்தில் தமக்கென ஒரு இடத்தை உறுவாக்கிக் கொண்டவர். அவர் விட்டுச் சென்றது ஒரு வெற்றிடமே!
ஜெயலலிதா மறைவினால் அமெரிக்க வாழ் தமிழர்கள் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் ஒரு மாபெரும் தலைவி. அரசியலிலும், பொது வாழ்விலும் அனைவரது மரியாதைக்குப் பாத்திரமாகி யாரும் இட்டு நிரப்ப முடியாத ஒரு இடத்தினை விட்டுச் செல்கிறார்.
அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
-இவ்வாறு அந்த அறிக்கையில் டாக்டர் ராஜன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications