அதெப்படி கிறிஸ்துமஸ் தாத்தா மட்டும் சும்மா இருக்கலாம்.. மாஸ்க் மாட்டி விட்ட கிரேக்கிஸ்.. வேற லெவல்!
முகக்கவசத்துடன் கூடிய கிறிஸ்துமஸ் தாத்தா மெழுகுவர்த்திகள் கிரேக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஏதென்ஸ்: கிறிஸ்துமஸ் திருவிழாவையொட்டி கிரீஸ் நாட்டில் அறிமுகமாகியுள்ள முகக்கவசத்துடன் கூடிய கிறிஸ்துமஸ் தாத்தா மெழுகுவர்த்திகள் பலரையும் கவர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் சர்வதேச பரவல் ஆரம்பமானதில் இருந்து நமது உடைகளின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டன முகக்கவசங்கள். மாஸ்க் அணியாமல் யாரும் வெளியே நடமாடக்கூடாது என சட்டம் இயற்றும் அளவுக்கு தீவிரமடைந்துவிட்டது நிலைமை.
எனவே தற்போது சந்தைக்கு வரும் பொருட்கள் அனைத்திலுமே முகக்கவசம் இடம்பெற்றுவிடுகிறது. அந்த வகையில் கிரீஸ் நாட்டில் முகக்கவசத்துடன் கூடிய கிறிஸ்துமஸ் தாத்தா மெழுகுவர்த்திகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சாண்டா மெழுகுவர்த்தி
கிரீஸ் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள தெசலோனிகி எனும் ஊரைச் சேர்ந்தவர் அலெக்சியஸ் கிரேகிஸ். 37 வயது இளைஞரான இவர் தான் இந்த சாண்டா மெழுகுவர்த்திகளை வடிவமைத்துள்ளார். ஒவ்வொரு சாண்டாவும் நீல நிற மாஸ்க் அணிந்திருக்கிறார்.

சந்தேகம் தான்
"தற்போதைய சூழலில் நமது உடல் ஆரோக்கியம் தான் பிரதானம். மற்றதெல்லாம் அதற்கு பிறகு தான். அதை முன்நிறுத்தவே இந்த மாஸ்க் சாண்டா மெழுகுவர்த்திகளை வடிவமைத்தேன். இந்த ஆண்டு கிறிஸ்துமுஸ் கொண்டாட்டம் எந்த அளவுக்கு பெரியதாக இருக்கும் என்பது சந்தேகம் தான்.

நம்பிக்கை
இந்த சூழ்நிலை எப்போது முடியும் என யாருக்கும் தெரியாது. நாம் நம்பிக்கையுடன் இருப்பது அவசியம். ஆனால் என்ன நடக்கும் என்பது யாருக்கு தான் தெரியும்?", என கவலையும் கூறுகிறார் அலெக்சியஸ் கிரேகிஸ்.

ஊரடங்கு
கிரீஸ் நாட்டிலும் கொரோனா பரவல் அதிகமாக இருக்கிறது. இந்த மாதம் இறுதி வரை அங்கும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. அந்நாட்டில் கடந்த திங்கள்கிழமை வரை 1228 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications