மெக்சிகோ தரைப் பகுதியில் 1 கி.மீ. தூரத்துக்கு 26 அடி ஆழ வெடிப்பு.. விவசாயிகள் கட்டிய தடுப்பணையால்!
மெக்சிகோசிட்டி: மெக்சிகோ நாட்டின் தரைப் பகுதியில் திடீரென ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு 16 அடி அகலம், 26 அடி ஆழ வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
மெக்சிகோவின் வட மேற்கில் ஹெர்மோசிலோ பகுதி. இங்குள்ள பண்ணை நிலமொன்றில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது. இந்த 26 அடி ஆழ, 16 அடி அகல வெடிப்பு சுமார் 1 கி.மீட்டர் தூரம் வரை நீண்டிருந்தது.
இந்த வெடிப்பால் நெடுஞ்சாலையும், கடற்கரை பகுதியும் பாதிக்கப்பட்டது. இதனால், சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மண்வள நிபுணர்கள் பூமியில் திடீர் வெடிப்பு ஏற்படக் காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
முதலில் சமீபத்தில் அப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்த வெடிப்பிற்குக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்பட்டது. பின்னர், தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில் சமீபத்தில் இப்பகுதியில் விவசாயிகள் கட்டிய தடுப்பணை இந்த வெடிப்புக்குக் காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது, தடுப்பணைப் பகுதியில் கசிந்த நிலத்தடி நீர் மிருதுவான நிலப்பகுதிக்கு மேலே பீறிட்டு வந்ததால் பூமியில் வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அவர்கள் விளக்கமளித்துள்ளனர். தொடர்ந்து வெடிப்பு ஏற்பட்ட பகுதியில் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.