பாகிஸ்தானில் "பயங்கர" தீபாவளி- மசூத் அசாரின் 'வலது கரம்' சுட்டு கொலை- கதறும் தீவிரவாத கும்பல்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இந்தியாவுக்கு எதிரான சர்வதேச பயங்கரவாதி மசூத் அசாரின் வலது கரம் மவுலானா ரஹீம் உல் தாரிக் மர்ம நபர்களால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். பாகிஸ்தானில் மர்ம நபர்களால் கொல்லப்பட்டு வருவதால் பயங்கரவாதிகள் அந்நாட்டு அரசிடம் பாதுகாப்பு கோருவதாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் பதுங்கிக் கொண்டு இந்தியாவுக்கு எதிரான நாசவேலைகளை மதத்தின் பெயரால் பயங்கரவாத இயக்கங்கள் மேற்கொண்டு வருகின்றன. ஜம்மு காஷ்மீரை ஆக்கிரமிப்பது, இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவது, ஐஎஸ் உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆள் சேர்ப்பது ஆகியவற்றை அஜெண்டாக்களாக கொண்டு இந்த இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்கு இந்தியாவும் உலக நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்த போதும் பயங்கரவாதிகளின் புகலிடமாகவே பாகிஸ்தான் தொடர்ந்து இருந்து வருகிறது.

அண்மைகாலமாக பாகிஸ்தானில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் அடுத்தடுத்து மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர். 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலின் மூளையாக இருந்த ஹபீஸ் சயீத்தின் மகன் தொடங்கி லஷ்க இ தொய்பா பயங்கரவாதிகள் வரை இந்த மர்ம நபர்களின் டார்கெட்டுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது தீபாவளி நாளில் சர்வதேச பயங்கரவாதி மசூத் அசாரின் வலதுகரமான மவுலானா ரஹீம் உல் தாரிக் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவுக்கு எதிரான பொதுக் கூட்டத்துக்கு சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்களால் ரஹீம் உல் தாரிக்கை சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்தனர்.
ஏற்கனவே 2018-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் சஞ்சுவான் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி க்வாஜா ஷாகித் அலியாஸ் மியா முஜாஹித், பதன்கோட் தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஷாகீத் லத்தீப், ரியாஸ் அகமது என கடந்த சில வாரங்களாக பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த வரிசையில் ரஹீம் உல் தாரிக் மர்ம நபர்களால் கொல்லப்பட்டிருக்கிறார். மேலும் சுட்டுக் கொல்லப்பட்ட சில பயங்கரவாதிகளின் தலைகள் துண்டிக்கப்பட்டும் இருக்கின்றன. இதனால் மரண பயத்தில் இருக்கும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள், அந்நாட்டு அரசிடம் பாதுகாப்பு கோரி உள்ளனர்.












Click it and Unblock the Notifications