இவர்தான் சத்யா... சத்யா நாதெல்லா...!
சிலிக்கன் வேலி: ஸ்டீவ் பாமர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஓய்வு பெற்றபோது யார் அடுத்த மைக்ரோசாப்ட் தலைமை செயலதிகாரி என்ற கேள்விகள் உயர்ந்து நின்றன... அந்த சஸ்பென்ஸுக்கு நேற்று அதாவது பிப்ரவரி 4ம் தேதி விடை கொடுத்துள்ளார் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்... 22 வருடமாக மைக்ரோசாப்ட் குடும்பத்தின் ஒரு அங்கத்தினராக கலந்து போய் விட்ட சத்யா நடெல்லாதான் அவர்.
46 வயதான சத்யா, ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தேச் சேர்ந்தவர். மங்களூரில் படித்தவர்.. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர், அந்த நிறுவனத்தோடு சேர்ந்து இவரும் உயர்ந்தவர்.
38 வயதான மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் 22 ஆண்டு காலமாக இருந்துள்ள சத்யாவின் வளர்ச்சிக்கு எப்படி மைக்ரோசாப்ட் காரணமோ, அதேபோல மைக்ரோசாப்ட்டின் வளர்ச்சிக்கு சத்யாவும் ஒரு முக்கியப் பங்கு என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.
சரி சத்யா தன்னைப் பற்றி என்ன சொல்லியுள்ளார் என்பதைப் பார்ப்போமா...

எனக்குப் பிடித்த கிரிக்கெட்
எனக்கு கிரிக்கெட் ரொம்பப் பிடிக்கும். இளம் வயதில் நிறைய போட்டிகளில் ஆடியுள்ளேன். ஒரு குழுவாக எப்படி மற்றவர்களுடன் இணைந்து செயல்படுவது, வெற்றிகளைப் பெறுவது என்பதை அதுதான் கற்றுக் கொடுத்தது. அப்போது கற்றது இன்னும் எனக்குள்ளேயே இருக்கிறது.

கற்பதில் வேட்கை கொண்டவன்
எனக்கு எப்போதுமே எதையாவது கற்க ஆர்வம் அதிகம். கற்றுக் கொண்டே இருக்கப் பிடிக்கும். அதுவே என்னை உற்சாகப்படுத்தும். ஏதாவது ஒன்றைப் புதிதாக கற்றுக் கொண்டே இருப்பேன். அது சின்னதோ, பெரியதோ.. கவலைப்பட மாட்டேன். சும்மா இருக்க எனக்குப் பிடிக்காது.

மாத்தி யோசிக்க பிடிக்கும்
எந்த செயலையும் ஒரே மாதிரியாக, எல்லோரும் செய்வது போல செய்யவும் பிடிக்காது. வித்தியாசமாக செய்யப் பிடிக்கும். அப்படித்தான் செய்யவும் முயற்சிப்பேன்.

திறமையை மதிப்பேன்
மற்றவர்களின் திறமையை மதிப்பேன். அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்வேன்.

குடும்பமாக செயல்பட வேண்டும்
எப்போதுமே ஒரு குடும்பம் போல குழுவினர் இணைந்து செய்பட வேண்டும். அறிவு வேட்கை இருக்க வேண்டும். ஆர்வம் இருக்க வேண்டும். அது எல்லாமே என்னிடம் உள்ளது.. அதுதான் நான்.

ஆன்லைனில் படிக்கிறேன்
இந்த நிலையிலும் கூட நான் ஆன்லைனில் ஏதாவது கோர்ஸ் இருக்கிறதா என்று பார்ப்பது வழக்கம். ஏதாவது இருந்தால் சேர்ந்து படிப்பேன். படிப்பதற்கு என்ன தகுதி வேண்டும்.. ஆர்வம் மட்டுமே போதுமானது. தற்போது நியூரோ சயின்ஸ் கோர்ஸ் ஏதாவது ஒன்றில் சேர்ந்து படிக்க ஆசையாக இருக்கிறது. முயற்சித்து வருகிறேன்.

வேலை பார்த்துக் கொண்டே படித்தேன்
எனக்கு மைக்ரோசாப்ட்டில் வேலை கிடைத்தபோது எனது படிப்பை முடிக்கவில்லை. இருந்தாலும் வேலை மற்றும் படிப்பை தொடர முடிவு செய்தேன். இதனால், வெள்ளிக்கிழமை இரவுகளில் நான் சிகோகாவுக்கு விமானத்தில் போவேன். சனிக்கிழமை கல்லூரிப் படிப்பு. அதை முடித்து விட்டு மறுபடியும் ரெட்மான்ட் திரும்பி வந்து வேலையைத் தொடருவேன். இப்படியே செய்து படிப்பை முடித்தேன் என்று தன்னைப் பற்றிக் கூறியுள்ளார் சத்யா நடெல்லா.












Click it and Unblock the Notifications