மளமளவென பரவிய தீ.. எரிபொருள் திருடியவர்களில் 73 பேர் உடல்கருகி பலி.. இது மெக்சிகோ சோகம்
மெக்சிகோ சிட்டி: மெக்ஸிகோவில் குழாயை உடைத்து, எரி பொருள் திருடி கொண்டிருந்த சம்பவத்தில் 73 பேர் அங்கு நடந்து விபத்தில் சிக்கி, பலியான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மெக்சிகோவின் ஹிடால்கோ என்ற மாநிலத்தில் இருந்த எரிபொருள் குழாய் ஒன்றை உடைத்து பலர் எரி பொருள் திருடி வந்துள்ளனர். இது அந்த பகுதியில் இருந்த அதிகாரிகளுக்கு தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் அங்கு இருந்த உள்ளூர்மக்கள் பலர் குழாயில் இருந்து ஒழுகிய எரிபொருளை திருட்டுத்தனமாக வாளிகளில் பிடித்து சென்று சந்தைகளில் விற்று பணம் சம்பாதித்து வந்துள்ளனர்.

திருடும் போது விபத்து
வழக்கம் போல் சிலர் அந்த குழாயில் எரிபொருள் திருடி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக விரிசல் ஏற்பட்டு தீ பற்றி எரிய ஆரம்பித்தது. மளமளவென பற்றிய தீயில் அங்கு எரிபொருள் திருடி கொண்டிருந்த 20க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

பலி எண்ணிக்கை 73
100க்கும் அதிகமானோர் பலத்த காயங்களுடன் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரும் இறக்க பலியானோரின் எண்ணிக்கை 73ஐ எட்டியுள்ளது.

மனம் பதைபதைக்கும் விபத்து
சம்பவம் நிகழ்ந்து சில மணி நேரங்களுக்கு பின்னரே விபத்தின் புகைப் படங்களும், வீடியோக்களும் ஊடகங்களில் வெளிவர ஆரம்பித்தன. உடல் முழுவதும் தீப்பற்றிய மக்கள் உதவிக்காக ஓடுவதும், வலியில் கதறுவதும் பார்ப்பவரின் மனதை உலுக்கியது.

தீயணைப்பு வீரர்கள் போராட்டம்
அந்த குறிப்பிட்ட குழாயில் தீ எரிந்து கொண்டு தான் உள்ள நிலையில் தீயினை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 73 பேரின் உயிரை மாய்த்த இந்த கோர சம்பவத்தை பற்றி அந்த மாநில ஆளுனர் உமர் பையத் கூறும்போது, எங்களுக்கு தெரிந்ததெல்லாம் அங்கு பல நாட்களாக சட்ட விரோதமாக எரிபொருள் திருட்டு நடந்து கொண்டிருந்துள்ளது. அது அந்த பகுதி அதிகாரிகளுக்கும் தெரிந்தே நடந்துள்ளது என்பது மட்டும் தான் என்று கூறியுள்ளார்.

விபத்துக்கான காரணம்?
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் லோபஸ் ஓப்ரடார் கூறுகையில், எண்ணெய் குழாயில் துளையிட்டு எரிபொருள் திருடி வந்தவர்களாலேயயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்றார். அவர் மேலும் கூறியதாவது: பொருளாதார ரீதியாக மட்டுமின்றி ஏராளமான உயிரிழப்பையும் கண்டு மனம் வருந்துகிறது.












Click it and Unblock the Notifications