மெக்சிகோவில் இன்னொரு எஸ்கோபார்; இரு கும்பல்களுக்கு இடையேயான மோதலில் பொதுமக்கள் உட்பட 11 பேர் பலி
மெக்சிகோ சிட்டி: வட அமெரிக்காவின் மெக்சிகோவில் உள்ள சில்டட் ஜூவரிஸ் நகரில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பொதுமக்கள் உட்பட 11 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நாட்டில் பல்வேறு போதைப்பொருள் கும்பல்கள் செயல்பட்டு வரும் நிலையில், அவ்வப்போது இவர்களுக்கிடையே மோதல்கள் வெடித்த வண்ணமுள்ளன.
நேற்று சில்டட் ஜூவரிஸ் நகரில் உள்ள சிறைச்சாலையில் இரு பிரிவினருக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் 20 பேர் படுகாயமடைந்தனர் 2 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது சிறைக்கு வெளியே மோதல் ஏற்பட்டுள்ளது.
மெக்சிகோவில் போதைப்பொருள் வணிகம் என்பது கொடிகட்டி பறக்கும் ஒரு வெற்றிகரமான தொழிலாகும். அந்நாட்டின் பொருளாதாரத்தில் கடும் சாவால் விடும் அளவு போதைப்பொருட்களின் மூலம் சட்ட விரோதமாக வருமானம் கிடைக்கப்பெறுகிறது. இந்நிலையில் இந்த போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் விநியோக கும்பலை சேர்ந்த இரண்டு குழுக்கள் சில்டட் ஜூவரிஸ் நகரில் உள்ள சிறைச்சாலையில் நேற்று ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.
இதில் 20 பேர் படுகாயமடைந்தனர் 2 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து சிறைச்சாலைக்கு வெளியேயும் இந்த கும்பல்கள் மோதிக்கொண்டன. மோதலில் கண்ணில் பட்ட பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டு தள்ளியுள்ளனர். வானொலி நிலையத்தின் ஊழியர்கள் நால்வர் என 9 பொதுமக்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்நாட்டின் போதைப்பொருள் கடத்தல் மன்னனாக ஜோக்வின் குஸ்மான் உள்ளார். இவருக்கு கீழ் இயங்கும் குழுக்கள்தான் இந்த மோதலில் ஈடுபட்டுள்ளன.
இந்த தாக்குதல் சம்பவத்தில் சுமார் 11 பேர் உயிரிழந்த நிலையில், 16 காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் தெரிவித்துள்ளார். இந்த மோதல் சம்பவம் எதற்காக நடைபெற்றது என்பது குறித்து காரணங்கள் அறிவிக்கப்படவில்லை. இந்த சம்பவத்தையடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பகுதிகளில் தீ வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இதுவரை 6 பேரை அந்நாட்டு ராணுவம் மற்றும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஜோக்வின் குஸ்மான் நீண்ட காலமாக அரசுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவராவார். இந்நாட்டில் தயாரிக்கப்படும் போதைப்பொருட்களை அமெரிக்காவுக்கு கடத்துவதே இந்த குழுக்களின் முக்கிய நோக்கமாகும். அதேபோல இந்த குழுக்களுக்கு இடையே நடைபெறும் மோதல்கள் என்பது இது முதன் முறையல்ல. கடந்த ஆண்டு இதுபோன்ற மோதலில் சுமார் 1,400 வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.