மாயமான விமானத்தில் லித்தியம் பேட்டரிகள்: தீப்பிடித்து கடலுக்குள் விழுந்ததா?
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்ட லித்தியம் பேட்டரிகளால் விமானம் தீப்பிடித்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மலேசிய விமானம் எம்.ஹெச். 370 மாயமாகி கிட்டதட்ட ஒரு மாதம் ஆகிறது. கடந்த 8ம் தேதி 239 பேருடன் மலேசியாவில் இருந்து சீனா சென்ற விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்துவிட்டதாக மலேசியா அறிவித்தது.
இதையடுத்து பல நாட்டு விமானங்கள் மற்றும் கப்பல்கள் மாயமான விமானத்தை தேடி வருகின்றன. ஆனால் விமானத்தின் பாகங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. கடலில் மிதந்த பொருட்களை கைப்பற்றி ஆய்வு செய்ததில் அவற்றுக்கும் மாயமான விமானத்திற்கும் தொடர்பில்லை என்று தெரிய வந்தது.
இந்நிலையில் விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்ட சரக்குகளில் லித்தியம் பேட்டரிகள் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. முன்னதாக பல்வேறு விமானங்கள் தீப்பிடித்து எரிய லித்தியம் பேட்டரிகள் தான் காரணம் என்று கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வேளை மலேசிய விமானம் லித்தியம் பேட்டரிகளால் தீப்பிடித்து எரிந்து கடலுக்குள் விழுந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆனால் லித்தியம் பேட்டரிகள் முறையாக பேக் செய்யப்பட்டதால் அவற்றால் எந்தவித ஆபத்தும் இல்லை என்று மலேசியன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.