மாயமான விமானம் குறித்த அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும்... மலேசிய பிரதமர் உறுதி
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்தைக் குறித்த அறிக்கை அடுத்தவாரம் வெளியிடப்படும் என மலேசியா அறிவித்துள்ளது.
கடந்த மாதம் 8ம் தேதி மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 5 இந்தியர்கள் உட்பட 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் நடுவானில் திடீரென மாயமானது.
தொடர்ந்து மாயமான விமானம் இந்திய பெருங்கடலில் தேடப்பட்டு வருகிறது. ஆனால் விமானம் குறித்து முரண்பட்ட தகவல்கள் தான் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

இதற்கிடையே விமானம் விபத்தில் சிக்கியதாக மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதற்கு விமானத்தில் பயணம் செய்த சீனப் பயணிகளின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விபத்திற்கான ஆதாரத்தைக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கருப்பு பெட்டியை மீட்கும் முயற்சியில் 8 நாடுளின் 10 கப்பல்கள், 8 விமானங்கள், 49 ஆயிரம் சதுர கிலோமீட்டரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன.
சமீபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் இறந்து விட்டதாகக் கூறி இறப்புச் சான்றிதழ் அளிக்க இருப்பதாக மலேசியா அறிவித்தது. இதற்கும் மலேசியாவை பயணிகளின் உறவினர்கள் கண்டித்தனர்.
இந்நிலையில், நேற்று மலேசிய பிரதமர் நிஜாப் ராசாக், ‘விமானம் காணாமல் போனதற்கான காரணம் மற்றும் அதை தேடும் பணி நிலவரம் குறித்து அடுத்தவாரம் அறிக்கை வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், மலேசிய அரசு மற்றும் சர்வதேச விசாரணைக்குழு நிபுணர்கள் தயாரித்த அறிக்கை அடுத்த வாரம் வெளியிடக்கூடிய வாய்ப்பு உள்ளது.சர்வதேச விசாரணைக்குழு தாங்கள் சேகரித்த தகவல்களை அடுத்தவாரம் பொதுமக்களுக்கு வெளியிடுவார்கள் என்றார் நிஜாப்.












Click it and Unblock the Notifications