நைஜர் நாட்டில் ராணுவம் திடீர் புரட்சி- அதிபர் அதிரடி கைது- ஆட்சியை கைப்பற்றியதாக பிரகடனம்!
நியாமே: மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜர் நாட்டில் ராணுவம் திடீரென ஆட்சிக் கவிழ்ப்பு புரட்சியில் இறங்கியது. அந்நாட்டு அதிபர் முகமது பாசும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டதாகவும் நைஜர் ராணுவம் பிரகடனம் செய்துள்ளது. இந்த ராணுவ புரட்சிக்கு ஐநா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நைஜர் நாட்டில் ராணுவத்தினர் திடீரென புரட்சியில் ஈடுபட்டனர். அதிபர் முகமது பாசுமை அவரது பாதுகாவலர்களே சிறைபிடித்து வைத்துவிட்டதாகவும் அந்நாட்டு டிவியில் அறிவித்திருக்கின்றனர். இதனையடுத்து தலைநகர் நியாமேவில் பெருந்திரளாக மக்கள் ஒன்று திரண்டனர்.

நியாமேவில் ஒன்று கூடிய மக்களை விரட்டியடிக்க ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. 1960-ம் ஆண்டு பிரான்ஸிடம் இருந்து நைஜர் விடுதலை அடைந்த காலம் முதல் அரசியல் வன்முறைகளால் அந்நாடு சீர்குலைந்து போனது. இதற்கு முன்னர் 4 முறை ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகள் நடைபெற்றுள்ளன. 2010-ம் ஆண்டு அப்போதைய அதிபர் Mamadou Tandja தலைமையிலான ஆட்சியை ராணுவம் தூக்கி எறிந்தது.
2021-ம் ஆண்டு முதல் அதிபராக முகமது பாசும் பதவியில் இருந்து வருகிறார். ஜிஹாதிகளின் ஆயுத கிளர்ச்சியையும் அண்மைக் காலமாக நைஜர் நாடு எதிர்கொண்டு வந்தது. தலைநகர் நியாமேவில் இருந்து 100 கிமீ தொலைவில்தான் அல் குவைதா மற்றும் ஐஎஸ் ஆதரவு பெற்ற ஜிஹாதிகளுக்கு இடையேயான மோதல் நடைபெற்றும் வருகிறது.
நைஜர் நாட்டின் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைக்கு ஐநா சபை, ஆப்பிரிக்கா ஒன்றியம் உள்ளிட்டவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications