கொரோனாவால் பல லட்சம் பேர் பலியாக நேரிடும்- ஈரான் ஷாக் வார்னிங்
தெஹ்ரான்: கொரோனா தொடர்பான அறிவுறுத்தல்களை கடைபிடிக்காமல் பயணங்களை மேற்கொண்டால் பல லட்சம் பேர் பலியாக நேரிடும் என்று ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சீனாவை தொடர்ந்து உலக நாடுகளில் இத்தாலி, ஈரானில்தான் கொரோனாவின் தாக்கம் மிக கொடூரமாக இருந்து வருகிறது. உலகம் முழுவதும் பல ஆயிரம் உயிர்களை காவு வாங்கி இருக்கிறது கொரோனா.
பல லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகளின் ஒட்டுமொத்த இயக்கத்தையுமே கொரோனா வைரஸ் முடக்கி வைத்திருக்கிறது. இதனால் ஒவ்வொரு நாடும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அறிவித்து வருகிறது
ஈரானிலும் பொது இடங்களில் ஒன்றுகூடுதல், கூட்டு வழிபாடு ஆகியவற்றை கைவிட வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் ஈரானில் இத்தகைய வழிபாட்டு முறைகள் பெருந்திரளாக நடத்தப்பட்டன. இதனால் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன.
இதனால் ஈரானில் பொதுமக்கள் போராட்டங்களையும் நடத்தினர். இதனையடுத்து அந்த நாட்டு மதத் தலைவரான அயதுல்லா கொமேனி வெளியிட்ட அறிவிக்கையில், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தியுள்ளார். ஈரானைப் பொறுத்தவரையில் இதேநிலைமை நீடித்தால் பல லட்சம் பேர் பலியாக நேரிடும் பேரவலம் நிகழும் எனவும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.