இஸ்ரேலில் திடீரென அலறிய சைரன்கள்.. ஓட்டம் பிடித்த பொதுமக்கள்! நொடிக்கு நொடி அதிகரிக்கும் பதற்றம்
டெல் அவிவ்: ஈரானின் அணுசக்தி நிலையங்களைக் குறிவைத்து இஸ்ரேல் திடீரென மீண்டும் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வரும் நிலையில், திடீரென ஏமனில் இருந்தும் இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளைப் பாய்ந்துள்ளன. இதனால் ஜெருசலேம் பகுதியில் சைரன்கள் அலறிய நிலையில், அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்கில் இப்போது நிலைமை மிக மோசமானதாக மாறிவிட்டது. ஈரான் மீது 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து இஸ்ரேல் இரு பெரிய தாக்குதல்களை நடத்தியுள்ளன. முதலில் இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை காலை ஈரானில் 100 தளங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் ராணுவ தளபதிகள், ஈரான் அணுசக்தி விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே மீண்டும் இந்திய நேரப்படி வெள்ளி இரவு ஈரானின் அணுசக்தி நிலையங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அங்குள்ள இரு அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கிடையே ஈரான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு பக்கம் ஈரானில் இருந்து டிரோன்கள் பாயும் நிலையில், மறுபுறம் ஏமனில் இருந்தும் தாக்குதல் நடப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏமனில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப்பட்டுள்ளது. இஸ்ரேலைத் தாக்கும் வகையில் இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதாகத் தெரிகிறது. இதன் காரணமாக ஜெருசலேம் பகுதியிலும் தெற்கு மேற்குக் கரை சைரன்கள் ஒலித்தன. திடீரென சைரன்கள் ஒலித்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடி தஞ்சம் புகுந்தனர். இதனால் அங்கு ஒரு போர் சூழல் ஏற்பட்டுள்ளது.
தனது நாட்டின் மீது தாக்குதல் நடத்த முயற்சிகள் நடப்பதாகவே இஸ்ரேல் கூறியிருக்கிறது. தனது நாட்டின் மத்திய பகுதிகளில் உள்ள நகரங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் கூறியுள்ளது. அதேநேரம் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications