மாயமான இந்திய மாணவியின் சடலம் அமெரிக்காவில் மீட்பு..
நியூயார்க்: கடந்த பிப்ரவரி 24 அன்று காணாமல் போன ஜாஸ்மின் ஜோசப் என்ற 22 வயது இளம்பெண் உயிரற்ற நிலையில் அவரது காரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
அவருடைய சடலம் நியூயார்க்கில் நேற்று கண்டு பிடிக்கப்பட்டது.அவரது வீட்டில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள "சியோசெட்" விற்பனை நிலையத்தின் கார் நிறுத்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரில் ஜாஸ்மின் பிணமாக கிடந்தார்.
அவர் தனது வீட்டிலிருந்து ஃபிப்ரவரி 24 அன்று தனது கல்லூரிக்கு புறப்பட்டுள்ளார்.அதன்பின் மாலையில் பெற்றோருக்கு தொடர்பு கொண்ட அவர் தான் கல்லூரி நூலகத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.அதன் பின்பு அவரிடம் இருந்து எந்த தகவலும் வர வில்லை.
அவர் தற்கொலைக்கு முயன்று இருக்கலாம் அல்லது மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர்.
முன்னதாக ஜாஸ்மின் தன்னுடைய பெற்றோரிடம் தான் நியூயார்க் கல்லூரியில் படிப்பதாக கூறியுள்ளார். ஆனால், அவருடைய பெற்றோர் அவருடைய கல்லூரியான நியூயார்க் பொறியியல் கல்லூரியில் தேர்வுக்கான பணத்தை செலுத்த சென்றபோது, கல்லூரி நிர்வாகத்தினர் அவர் மே மாதத்தில் இருந்தே கல்லூரியில் இல்லை என்று கூறியுள்ளனர்.
போலீசாரும் ஜாஸ்மின் என்.ஒய்.ஐ.டி யில் கடந்த செமஸ்டரில் இல்லவே இல்லை என்று கூறியுள்ளனர்.மேலும்,அவரது பெற்றோரின் அஜாக்கிரதை தன்மையையும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
"ஜாஸ்மினின் சொந்த வாழ்க்கையில் ஏதோ ஒரு பிரச்சனை இருந்திருக்கின்றது.அதனால் இந்த வழக்கு இன்னும் சிக்கலான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது" என போலீஸ் அதிகாரி கென்னெத் லேக் கூறியுள்ளார்.
ஜாஸ்மினின் பெற்றோர் இந்த கார் கண்டுபிடிக்கபட்ட இடத்தில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டதாக கூறியுள்ளனர்."இந்த கார் ஏன் அப்போதே கண்ணில் படவில்லை என்பது வினோதமாகவும்,ஆச்சரியமாகவும் உள்ளது" என்று ஜாஸ்மினின் மாமா ஜேம்ஸ் கூறியுள்ளார்.
கடந்த சில வாரங்களில் இதுபோல் மூன்று சம்பவங்கள் நடந்துள்ளன.காணாமல் போய் உள்ள அனைத்து மாணவர்களும் கேரளத்தை பூர்விகமாக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications