ஓமனில் பாதிப்புக்குள்ளாகும் இந்தியர்களுக்காக புதிய மொபைல் 'ஆப்' அறிமுகம்
மஸ்கட்: ஓமனில் பாதிப்புக்கு உள்ளாகும் இந்திய தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் புதிய செயலி(செல்போன் அப்ளிகேஷன்) ஒன்றை வெள்ளிக்கிழமை இந்திய தூதர் இந்திர மணி பாண்டே அறிமுகம் செய்து வைத்தார்.
ஓமன் நாட்டில் வேலைக்காக பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். சில நேரங்களில் அந்த தொழிலாளர்களுக்கு நிறுவனங்கள் முறையாக சம்பளம் உள்ளிட்டவற்றை வழங்குவதில்லை. இதனால் அவர்கள் எங்கு செல்ல வேண்டும் என தெரியாமல் திண்டாடி வருகின்றனர்.

இது குறித்து சிந்தித்த சமூக ஆர்வலர்கள் இந்த புதிய செயலியினை உருவாக்கினர். இந்த புதிய செயலியினை மஸ்கட்டில் நடந்த விழாவில் இந்திய தூதர் இந்திர மணி பாண்டே அறிமுகம் செய்தார்.
இந்த செயலியினை ஆப் வசதி கொண்ட போனில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மிக் கால் என்று பெயரிடப்பட்ட இந்த செயலியில் ஓமன் நாட்டில் உள்ள இந்திய தூதரக உதவி எண், இந்திய அமைப்புகளின் தொடர்பு எண்கள், இந்திய அரசின் உதவி எண்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இதனை ஓமன் மட்டுமல்லாது ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த நாடுகளின் இந்திய தூதரகங்களின் தொடர்பு எண்களும் இந்த ஆப்பில் கிடைக்கும். மேலும் போலீஸ், அவசர உதவி சேவை உள்ளிட்ட தொடர்பு எண்களும் இதில் அடங்கும்.
இந்த செயலி ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளிலும் இருக்கிறது. மேலும் அங்குள்ள இந்திய தூதரகத்திற்கு செல்லும் வழியினை இந்த செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த செயலி மிகவும் பயனுடையதாக இருக்கும் என பத்திரிகையாளர் கே. ரெஜிமோன், இந்திய வர்த்தகர் ஜோஸ் சாக்கோ, சமூக சேவகர்கள் சமீர் மற்றும் பஷீர் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
வெளிநாடுகளுக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு இது மிகவும் பயனுடையதாக இருக்கும் என கூறினர். குறிப்பாக வெளிநாட்டு மண்ணில் தேவைப்படும் நேரத்தில் இந்த செயலி அவர்களின் தேவையை நிறைவு செய்யும் என தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications