வியட்நாம் சென்றடைந்தார் பிரதமர் மோடி: முக்கிய தலைவர்களுடன் இன்று ஆலோசனை
ஹேனோய்: பிரதமர் நரேந்திர மோடி வியட்நாம், சீனா ஆகிய நாடுகளுக்கு 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மோடி தனது பயணத்தின் முதற்கட்டமாக நேற்று வியட்நாம் சென்றடைந்தார்.
வியட்நாம் தலைநகர் ஹனோய்க்கு சென்ற மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வியட்நாமில் அவர் முதல் முறையாக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
மோடி இந்த பயணத்தின் போது வியட்நாம் நாட்டு முக்கிய தலைவர்களுடன் பாதுகாப்பு, வர்த்தகம், ராணுவம், எண்ணெய் வளம், தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
வியட்நாம் பிரதமர் நிகுயென் ஜியுன் புக் மற்றும் அதிபர் திரன் தாய் குவாங் உடன் விரிவான ஆலோசனை நடத்துகிறார். வியட்நாம் விடுதலை போராட்ட தலைவர் ஹோசிமினுக்கு மோடி அஞ்சலி செலுத்துகிறார். தேசத்தின் விடுதலைக்காக போராடி உயிர் நீத்தவர்களுக்கு மரியாதை செலுத்துகிறார். இதையடுத்து சீனாவின் ஹன்சு நகருக்கு மோடி சென்றடைகிறார். அங்கு, ஜி20 மாநாட்டில் செப்டம்பர் 4 மற்றும் ஐந்தாம் தேதிகளில் மோடி பங்கேற்க உள்ளார்.