வணக்கம் சொல்லி கோலாலம்பூரில் இந்தியர்களிடையே உரை நிகழ்த்தினார் மோடி
கோலாலம்பூர்: கோலாலம்பூரில் இந்தியர்களிடையே இன்று பிரதமர் மோடி உரையாற்றியபோது, முதலில் வணக்கம் என்று தமிழில் சொல்லி தனது உரையைத் தொடங்கினார்.
மலேசியா வந்துள்ள மோடி இன்று 2வது நாள் பயணமாக இந்தியர்களிடையே உரை நிகழ்த்தினார். பெரும் திரளாக கூடியிருந்த இந்தியர்கள் மத்தியில் அவர் பேசினார்.
மலேசிய இந்தியர்களில் பெரும்பான்மையானோர் தமிழர்களே என்பதால் தனது உரையைத் தொடங்கும்போது வணக்கம் என்று கூறி ஆரம்பித்தார் மோடி.
மோடியின் உரையிலிருந்து...

வணக்கம் சகோதர, சகோதரிகளே
வணக்கம், எனது அருமை சகோதர சகோதரிகளே. மலேசியாவுக்கு வருவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வளவு பெரிய அரங்கில் உங்கள் மத்தியில் நிற்பதில் பெருமைப்படுகிறேன்.

உலகம் முழுவதும் இந்தியா
இந்தியா என்பது தனது எல்லையோடு நின்று விடும் நாடு அல்ல. ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் இந்தியா வியாபித்து நிற்கிறது. உலகின் அனைத்து மூலைகளிலும் இந்தியா இருக்கிறது. உங்கள் எல்லோருக்குள்ளும் இந்தியா இருக்கிறது.

இந்தியா மீதான அன்பு
இந்தியா மீதான உங்களது அன்பு ஒருபோதும் சுருங்கி விடவில்லை. உங்களது ஒவ்வொரு விழாவிலும் அதை நான் காண்கிறேன். இந்தியாவின் நிறத்தை அதில் காண்கிறேன்.

மலாய் இந்தியர்களுக்கு சிறப்பிடம்
எனது இடத்தில் மலாய் இந்தியர்களுக்கு என்றுமே சிறப்பிடம் உண்டு. உங்களது அன்பும், நட்பும் மறக்க முடியாதது.

வள்ளுவர் அன்றே சொன்னார்
உங்கள் முன்பு நான் மாபெரும் புலவர் திருவள்ளுவரின் கருத்தைச் சொல்ல விரும்புகிறேன். நட்பு என்பது முகத்தில் தெரியும் புன்னகை மட்டுமல்ல. மாறாக நமது இதயத்தின் அடி ஆழத்திலிருந்து வரும் அது வர வேண்டும் என்று வள்ளுவர் மிக அழகாகச் சொல்லியுள்ளார் (முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு").

எப்போது வந்தாலும்
இங்கு நான் பதவியில் இல்லாதபோது வந்தபோதும் சரி, இப்போது பிரதமராக வந்தபோதும் சரி ஒரே மாதிரியான அன்போடுதான் நீங்கள் என்னை வரவேற்றீர்கள். இதனால்தான் மலாய் இந்தியர்களுக்கு எனது மனதில் எப்போதுமே சிறப்பிடம் உண்டு.

உங்கள் அன்பு
பன்னெடுங்காலத்திற்கு முன்பு உங்களது முன்னோர்கள் இங்கு வந்தனர். உங்களில் பலர் சமீபத்தில் இங்கு வந்திருக்கக் கூடும். எந்த சூழலில் வந்தாலும், எப்போது வந்திருந்தாலும் உங்களது இந்தியா மீதான அன்பு என்றும் மாறாமல் அப்படியே உள்ளது.

நேதாஜிக்கு உதவிக் கரம் நீட்டியவர்கள்
உங்களது தாத்தாக்களில் பலர் நேதாஜியின் சுதந்திரப் போராட்டத்திற்கு உதவிக் கரம் நீட்டியவர்கள். அவருடன் இணைந்து செயல்பட்டவர்கள். இதற்காக மலாய் இந்தியர்களுக்கு சுதந்திர இந்தியா நன்றிக் கடன்பட்டுள்ளது என்றார் மோடி.












Click it and Unblock the Notifications