மியான்மரில் ஜனநாயகத்திற்காக பாடுபட்ட ஆங் சான் சூ கியை சந்தித்த மோடி
நாபிடா: மியான்மர் எதிர்கட்சி தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூ கியை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள மியான்மர் சென்றார். அங்கு அவர் மியான்மர் எதிர்கட்சி தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூ கியை(69) புதன்கிழமை சந்தித்து பேசினார். அப்போது சூ கி மோடியிடம் இந்தியா தனது இரண்டாவது வீடு என்று தெரிவித்துள்ளார். மேலும் தான் இந்தியாவில் இருந்த காலத்தை நினைவு கூர்ந்துள்ளார்.
மியான்மரை ஆண்டு வந்த ராணுவத்தை எதிர்த்து போராடிய சூ கியை மோடி ஜனநாயகத்தின் அடையாளம் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் செய்யது அக்பருத்தீன் கூறுகையில்,
சூ கி மோடியிடம் இந்தியாவை புகழ்ந்து பேசினார். மியான்மரில் இருந்து அவர் முதன்முதலாக சென்ற வெளிநாடு இந்தியா தான் என்று கூறினார் என்றார்.
மோடி சூ கிக்கு பகவத் கீதையை பற்றி மகாத்மா காந்தி எழுதிய கருத்துகள் அடங்கிய புத்தகத்தை பரிசளித்தார். சூ கி டெல்லியில் தான் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். அவர் கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியா வந்தார்.