நமக்கு இப்படி வாய்க்கலியே.. தினமும் ஆபீஸ் டூ வீடு.. விமானத்தில் போய்விட்டு வரும் ரேச்சல் கவுர்!
கோலாலம்பூர்: பொதுவாக, வேலைக்குச் செல்ல பஸ் அல்லது ரயிலில் பயணிக்கும் பெண்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். டூவீலர் அல்லது காரில் பயணிப்பார்கள். ஆனால், மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் தனது அலுவலகத்திற்கு தினமும் விமானத்தில் சென்று வருகிறார்.
ரேச்சல் கவுர் என்ற அந்த பெண், ஏர்ஆசியா நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் பினாங்கு பகுதியில் உள்ளார்கள். குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என்பதற்காக, கோலாலம்பூரில் ஆபீஸ் இருந்தாலும் பினாங்கில் தங்கிவிடுகிறார் ரேச்சல் கவுர். பிறகு, தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து, பினாங்கு பகுதியில் இருந்து கோலாலம்பூருக்கு விமானத்தில் செல்கிறார்.

முன்பு கோலாலம்பூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, வார இறுதியில் குழந்தைகளைப் பார்க்க பினாங்குக்கு செல்வாராம். ஆனால் இப்போது குழந்தைகள் வளர்ந்துவிட்டதால், அவர்களை கூடவே இருந்து பார்க்க விரும்பி, தினமும் விமானத்தில் சென்று வருகிறார். "குழந்தைகளுக்கு அம்மா பக்கத்தில் இருக்கனும்," என்கிறார் ரேச்சல்.
விமானத்தில் பயணம் செய்வது அவருக்கு சிக்கனமாகவும் இருக்கிறது என்பதுதான் இதில் ஆச்சரியம். மலேசிய தலைநகராக உள்ள கோலாலம்பூர் ஒரு காஸ்மோபாலிட்டன் சிட்டி. இதனால் அங்கு விலைவாசி அதிகமாக இருக்கும். கோலாலம்பூரில் வீடு வாடகைக்கு எடுக்க மாதம் சுமார் 1,400 முதல் 1,500 RM (ரிங்கிட் என்பது மலேசிய பண மதிப்பு) வரை செலவாகும். ஆனால் இப்போது, ஏர்ஆசியா ஊழியர் என்பதால், விமான டிக்கெட்டுக்கு மாதம் 1,100 ரிங்கிட் மட்டுமே செலவாகிறது. சாப்பாட்டுச் செலவும் பினாங்கில் குறைவாக உள்ளது. முன்பு 600 RM வரை செலவான சாப்பாடு, இப்போது 300 RM ஆக குறைந்துள்ளது.

விமானம் மூலம் தினமும் சென்று வருவதால், குழந்தைகளுடன் அதிக நேரம் இருக்க முடிகிறது என்கிறார் ரேச்சல். பண்டிகை சமயங்களில் விமானத்தில் இடம் கிடைப்பது கொஞ்சம் கடினமாக இருக்கும். ஆனாலும் எப்படியாவது வீட்டுக்குப் போய்விடுகிறேன் என்கிறார் அவர். நம்மூரில் அதிகரிக்கும் டிராபிக்கிற்கு, இனி நாமும் விமானத்தில் ஏறி பயணித்தால் பரவாயில்லைதான் போல.
ஒரு உதாரணத்திற்கு, பெங்களூரிலிருந்து சென்னைக்கு தினசரி விமானத்தில் வந்து சென்றால் ஐடி ஊழியர்கள் மனநிலை எப்படி இருக்கும். ஹேப்பியாக இருக்குமல்லவா, ஆபீசே விமான டிக்கெட்டை எடுத்து கொடுத்தால் அதைவிட ஹேப்பியாக இருக்குமல்லவா. ஓகே, கற்பனை ஓவர். பஸ்சுக்கு டைமாச்சு கிளம்புங்க சாரே..












Click it and Unblock the Notifications