மலேசியா முருகனை கேலி செய்து நடனம்.. எஃப்எம் ஊழியர் 3 பேருக்கு நேர்ந்த கதி.. இனி மறக்க மாட்டார்கள்
கோலாலம்பூர்: மலேசியாவில் புகழ்பெற்ற உலகின் பெரிய முருகன் சிலை உள்ளது. இங்கு தைப்பூச திருவிழாவையொட்டி பக்தர்கள் காவடி சுமந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்நிலையில் தான் முருகனுக்கு காவடி சுமந்து நேர்த்திக்கடன் சுமப்பதை கிண்டல் செய்து நடனமாடிய வானொலி நிறுவன ஊழியர்கள் 3 பேர் மீது அதிரடியாக ஆக்ஷன் பாய்ந்துள்ளது.
தமிழர்களின் கடவுளாக முருகனை இந்துக்கள் வழிப்பட்டு வருகின்றனர். குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் என்பதற்கு ஏற்ப தமிழகத்தில் பல இடங்களில் மலைகளின் மீது முருகன் கோவில் அமைந்துள்ளது. மலைகள் மீது ஏறி முருகனை மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

அதேபோல் வெளிநாடு என்று எடுத்து கொண்டால் மலேசியா முருகன் கோவில் பிரசித்திப்பெற்றது. மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் கோம்பாக் மாவட்டத்தில் பிரமாண்டமான பத்துமலை குகை முருகன் கோவில் அமைந்துள்ளது.
இங்குள்ள முருகன் சுப்பிரமணியசுவாமி என்று அழைக்கப்படுகிறார். உலகிலேயே மிகவும் உயரமான முருகன் சிலை இந்த கோவிலில் தான் உள்ளது. அதாவது தங்க நிறத்தில் 140 அடி உயர முருகன் சிலை பக்தர்களை கண்களை கவர்கிறது. இந்த கோவிலுக்கு மலேசியாவில் வசிக்கும் தமிழர்கள் மட்டுமின்றி நம்மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அவ்வப்போது தரிசனம் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி மலேசியாவில் இந்த முருகன் கோவில் சுற்றுலா தலமாகவும் பெயர் பெற்றுள்ளது. இதனால் மாற்று மதத்தை சேர்ந்தவர்களுக்கு முருகனை பார்த்து செல்கின்றனர்.
இந்தகோவிலில் தைப்பூசம் என்பது மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். அன்றைய தினம் பக்தர்கள் காவடி சுமந்து முருகனை வழிபாடு செய்வார்கள். இப்படி பிரசித்திப்பெற்ற மலேசியா முருகனை கேலி, கிண்டல் செய்து எஃப்எம்மில் பணியாற்றும் 3 பேர் மீது அதிரடியான ஆக்ஷன் பாய்ந்துள்ளது. அதாவது மலேசியாவில் தற்போது Era FM என்பது உள்ளது.
இங்கு ரதீன் அமீர் அஃபெண்டி அகமது அசாத் ஜஸ்மின் மற்றும் நபில் அகமது ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் 3 பேரும் முருகன் பாடலை ஒலிக்கவிட்டு பக்தர்கள் காவடி சுமந்து முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதை கிண்டல் செய்யும் வகையில் நடனமாடியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையானது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் பகிரங்கமாக மன்னிப்பு கோரினர்.
இந்த சர்ச்சையை தொடர்ந்து அவர்கள் 3 பேர் மீது அந்த எஃப் நிறுவனம் அதிரடி நடவடிக்கையை எடுத்தது. அதன்படி அவர்கள் 3 பேர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதோடு, அவர்களுக்கு எதிராக இன்டர்னல் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்து கடவுள் முருகனை கிண்டல் செய்து இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தியதாக பல்வேறு இடங்களில் புகார்கள் பதிவானது. இந்த புகாரை தொடர்ந்து அவர்கள் 3 பேர் மீதும் மொத்தம் 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்கள் மீதான வழக்குகளின் எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி மலேசியா காவல்துறை தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் கூறுகையில், ‛‛விசாரணை தொடங்கியதில் இருந்தே 73 புகார்கள் பெறப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் மத உணர்வுகளை புண்படுத்தும் வீடியோக்களை பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் '' என்று கூறியுள்ளார். அதேபோல் சம்பவம் தொடர்பாக விசாரணை அறிக்கை என்பது அட்டர்னி ஜெனரல் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications