திடீரென மாறிய காட்சிகள்.. டிரம்ப் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த எலான் மஸ்க்.. மோதல் முடிவுக்கு வருதா?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் ஆகியோருக்கு இடையே கருத்து மோதல்கள் நடந்து வந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், டிரம்ப் வெளியிட்ட ஒரு கருத்துக்கு எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார். தனிக்கட்சி தொடங்குவது தொடர்பாக எலான் மஸ்க் பரிசீலிப்பதாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது காட்சிகள் மாறியிருக்கின்றன. இதனால் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் மோதல் முடிவுக்கு வருகிறதா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் ஆகியோருக்கு இடையே கருத்து மோதல்கள் நடந்து வந்தன. இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், டிரம்ப் வெளியிட்ட ஒரு கருத்துக்கு எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார். குடியேற்றம் தொடர்பான சட்டத்தை மீறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த போராட்டங்கள் குறித்து டிரம்ப் தெரிவித்த கருத்துக்கு எலான் மஸ்க் ஆதரவு கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

குழப்பவாதிகள் மற்றும் கலகக்காரர்கள்
இந்தப் போராட்டம் பற்றி டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில், "கலிபோர்னியா கவர்னர் கேவின் நியூசமும், மேயர் பாஸும் லாஸ் ஏஞ்சல்ஸ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்கள் இந்தப் பிரச்சினையை சரியாகக் கையாளவில்லை. இவர்கள் போராட்டக்காரர்கள் அல்ல, அவர்கள் குழப்பவாதிகள் மற்றும் கலகக்காரர்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
டிரம்பின் இந்த பதிவுக்குதான் எலான் மஸ்க் ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். முன்னாதாக டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகிய எலான் மஸ்க் அவரை கடுமையாக விமர்சித்து வந்தார். தனிக்கட்சி தொடங்குவது தொடர்பாகவும் எலான் மஸ்க் பரிசீலிப்பதாக சொல்லப்பட்டது.
எலான் மஸ்க் டிரம்ப் மோதல்
டிரம்ப் அரசின் ஒப்பந்தங்களை ரத்து செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தை நிறுத்தப்போவதாக எலான் மஸ்க் அறிவித்தார். பிறகு, அந்த முடிவை மாற்றிக்கொண்டு, விண்கலம் தொடர்ந்து செயல்படும் என்றார். அதேபோல, ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கில் டிரம்ப் பெயர் இருப்பதாக எலான் மஸ்க் ஒரு கருத்தைத் தெரிவித்தார். பின்னர் அந்தப் பதிவை அவர் நீக்கிவிட்டார்.
"பெரிய உண்மையை வெளிப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. டொனால்ட் டிரம்ப் எப்ஸ்டீன் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார். அதனால்தான் அந்த ஆவணங்கள் வெளியிடப்படவில்லை" என்று மஸ்க் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். எலான் மஸ்க் - டிரம்ப் இடையே மோதல் உச்சத்தை தொட்ட நிலையில், தற்போது திடீர் திருப்பமாக இருவருக்கும் இடையே சமரச போக்கு ஏற்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் இவர்கள் மாறி மாறி கருத்துகளைப் பதிவிட்டு வந்த நிலையில், டிரம்ப் வெளியிட்ட ஒரு கருத்துக்கு எலான் மஸ்க் ஆதரவு கொடுத்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications