இந்த வீடியோவை நீங்க பார்க்கும்போது நான் ஜெயிலில் இருப்பேன்.. கைதுக்கு முன்பாக இம்ரான் கான் பேச்சு!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இன்று 'தோஷகானா' வழக்கு தீர்ப்பால் கைது செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்படுவதற்கு முன்பு இம்ரான் கான் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
2018 முதல் 2022 வரையிலான பதவி காலத்தில் 140 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் மதிப்புள்ள அரசு பரிசுகளை கருவூலத்தில் சேர்க்காமல் சட்டவிரோதமாக விற்றதற்காக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் லாகூரில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். இந்த ஆண்டில் இம்ரான் கான் கைது செய்யப்படுவது இது இரண்டாவது முறை.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்து இம்ரான் கான் பிரதமர் பதவியை இழந்தார். இதையடுத்து எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து, புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இவர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் தம்பி.
பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்பட்டதில் இருந்து, இம்ரான் கான் மீது 150க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன. ஏற்கனவே காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் கடந்த மே மாதம் அவர் கைது செய்யப்பட்டபோது, அவரது ஆதரவாளர்கள் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தையும், லாகூரில் உள்ள கார்ப்ஸ் கமாண்டர் இல்லத்தையும் சூறையாடினர். இதனால் பெரும் சேதம் ஏற்பட்டது.
இந்நிலையில், தோஷகானா எனப்படும் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றம் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனால் இம்ரான்கான் தனது எம்.பி. பதவியை இழக்கிறார். தீர்ப்பு வந்ததுமே உடனடியாக லாகூரில் உள்ள அவரது ஜமான் பார்க் இல்லத்திற்குள் புகுந்து பஞ்சாப் காவல்துறையினர் இம்ரான் கானை அதிரடியாக கைது செய்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்படுவதற்கு முன்பு இம்ரான் கான் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், "எனது கைது எதிர்பார்க்கப்பட்டது தான். இந்த வீடியோ செய்தி உங்களை வந்தடையும் நேரத்தில், நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பேன். கைது செய்யப்படுவதற்கு முன்பு இந்த வீடியோயை நான் பதிவு செய்தேன்.
உங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். எனது கட்சியினர் அமைதியாகவும், உறுதியுடனும், வலிமையுடனும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் அமைதியாக வீட்டில் உட்கார வேண்டாம். என்னுடைய இந்த தீவிர முயற்சிகள் எனக்காக அல்ல, என் மக்களுக்காக, என் சமூகத்திற்காக" என்று இம்ரான் கான் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications