கோரச் சம்பவத்துக்கு நடுவிலும் கேட்ட குண்டு சத்தம்! ஐ.நா கண்டனத்தால் போர்நிறுத்தம் அறிவித்த மியான்மர்
நய்பிடாவ்: மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து, மீட்பு பணிகளுக்கு உதவுவதற்காக, ஆயுதக் குழுக்களுக்கு எதிரான போர் நிறுத்த அறிவிப்பை மியான்மர் ராணுவ அரசு வெளியிட்டுள்ளது.
மியான்மர் மற்றும் அதன் அண்டை நாடான தாய்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. மேலும், இடிந்து விழுந்த கட்டடங்களுக்குள் இருந்து உடல்கள் மீட்கப்பட்ட வண்ணம் உள்ளன.

மியான்மரில் பல ஆண்டுகளில் மிக மோசமான இயற்கை பேரழிவு தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 2,800 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்னும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே, மியான்மரில் ராணுவ அரசு மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையே கடும் மோதல்கள் நடந்து வருகின்றன. 2021 ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவ ஆட்சிக்குழுவிற்கும், நாடு முழுவதும் உள்ள இனப் போராளிகள் மற்றும் எதிர்ப்புப் படைகளுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை இரவு, மியான்மர் இராணுவம் பூகம்ப நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற சீன செஞ்சிலுவைச் சங்க வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையிலும் கிளர்ச்சியாளர்கள் மீது விமானத்தில் சென்று குண்டு வீசி தாக்குவதை மியான்மர் ராணுவம் நிறுத்தவில்லை.
இது சர்வதேச அளவில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. மியான்மர் ராணுவ அரசுக்கு ஐ.நா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக மியான்மர் அரசு அறிவித்துள்ளது. ஏப்ரல் 22 ஆம் வரை இந்த போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்றும் அந்நாட்டு ராணுவ அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications