ஜனநாயகத்துக்கு வழி பிறக்குமா... உலகம் உற்றுநோக்கும் மியான்மர் நாடாளுமன்றத் தேர்தல்!
யாங்கூன்: உலக நாடுகள் அனைத்தும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது நவம்பர் 8-ந் தேதி நடைபெற உள்ள மியான்மர் நாடாளுமன்ற தேர்தலை... இந்த தேர்தல் முடிவுகள் அந்நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுமா? என்பதுதான் முதன்மை எதிர்பார்ப்பு
மியான்மரில் 50 ஆண்டுகாலத்துக்கும் மேலாக ராணுவ ஆட்சிதான் நடைபெற்றாலும் கடந்த சில ஆண்டுகளாகவே கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.. இதன் ஒருகட்டமாகத்தான் நவம்பர் 8-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

தற்போதைய அதிபர் தெயின் செயின் பதவிக்காலம் நவம்பருடன் முடிவடையும் நிலையில் ராணுவ ஆட்சியைத் தொடராமல் தேர்தல் களத்துக்கு அவர் வந்திருக்கிறார். மியான்மரைப் பொறுத்தவரையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் 25% இடங்கள் ராணுவத்துக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான்..
மியான்மர் வரலாற்றில் முதல் முறையாக கடந்த 1990ஆம் ஆண்டுதான் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. அத்தேர்தலில் நோபல் பரிசு வென்ற ஆங்சான்சூயின் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி அபார வெற்றியைப் பெற்றது.
ஆனால் அந்த நாட்டு ராணுவமோ ஆங்சாங் சூயின் வெற்றியை நிராகரித்தது. அத்துடன் அவரை சிறைப்படுத்தியது. கடந்த 25 ஆண்டுகாலத்தில் அவர் சிறைவாசத்தையும் வீட்டுக்காவலையும்தான் அனுபவித்து வருகிறார்.
2011ஆம் ஆண்டு தேர்தலில் ஆங்சாங் சூயி தேர்தலில் போட்டியிடவே அனுமதிக்கப்படவில்லை. அத்தேர்தலில் ராணுவத்துடன் இணைந்து யு.எஸ்.டி.பி கட்சி ஆட்சியை அமைத்தது. ராணுவமும் அரசியல்வாதிகளும் இணைந்த ஒரு கூட்டணி அரசாகத்தான் இது..
ஆனால் உலக நாடுகளின் நெருக்கடிகளுக்கு பணிந்து மியான்மர் மீது போர்த்தப்பட்டிருந்த இரும்புத்திரை மெல்ல மெல்ல விலக்கப்பட்டது. அனைத்து துறைகளிலும் ஜனநாயகம் கொஞ்சம் கொஞ்சமாக அனுமதிக்கப்பட்டது.
தற்போது ஜனநாயகம் முழுவதுமாக நிலைநாட்டப்படுவதற்காக நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் 91 கட்சிகளின் மொத்தம் 6,000 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பிரதான போட்டி என்பது ராணுவத்தின் ஆதரவு பெற்ற ஆளும் யு.எஸ்.டி.பி கட்சிக்கும் ஆங்சாங்சூயின் தேசிய லீக் கட்சிக்கும்தான்.
இருப்பினும் தேசிய லீக் கட்சி வெற்றி பெற்றாலும் அந்த நாட்டு அரசியல் சாசனப்படி ஆங் சாங் சூயி அதிபராக முடியாது. அவரது கணவர் இங்கிலாந்து நாட்டவர். அவரது குழந்தைகள் வெளிநாட்டு குழந்தைகளாக கருதப்படுவதால் அவரால் நாட்டின் உயரிய பதவிக்கு வர முடியாது.
அதே நேரத்தில் தம்மால் அதிபராக முடியாவிட்டாலும் தம்முடைய தேசிய லீக் கட்சி வெற்றி பெற்றால் நாட்டை என்னால் வழிநடத்த முடியும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார் சூயி.
இந்தத் தேர்தலை கண்காணிப்பதற்காக வெளிநாட்டு பார்வையாளர்களும் பத்திரிகையாளர்களும் பெரும் வெள்ளமாக மியான்மரில் குவிந்திருக்கின்றனர். அனைவரது எதிர்பார்ப்பும் மியான்மரில் ஜனநாயகம் சூறாவளியாக விஸ்வரூபமெடுக்காதா? என்பதுதான்..
இருப்பினும் 1990ஆம் ஆண்டைப் போலவே ஆங் சாங் சூயி வெற்றி பெற... ராணுவம் அதை நிராகரித்தால் மியான்மரின் எதிர்காலம் என்னவாகும்? என்ற பெருங்கவலையும் இருப்பதை தவிர்க்க முடியாது.












Click it and Unblock the Notifications