இளைஞர்களே இந்தியாவின் ஆற்றல்... மங்கோலியாவில் மோடி... நாடாளுமன்றத்தில் உரை!
உலன் படோர்: மங்கோலியா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது, ‘இளைஞர்களே இந்தியாவின் பலம்' என அவர் பேசினார்.
சீனா பயணத்தை முடித்து மங்கோலியா சென்றுள்ளார் பிரதமர் மோடி. அந்நாட்டு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் இன்று அவர் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-
மங்கோலியா வந்துள்ளது எல்லையற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. இந்நாட்டு மக்களும், நிலமும் அளவற்ற அழகை கொண்டது. ஜனநாயக உலகின் புதிய வெளிச்சம் மங்கோலியா. இந்த உலகம் எவ்வளவு அழகானது என இந்த நாடு நினைவுபடுத்துகிறது. இந்தியாவும் மங்கோலியாவும் முக்கிய மைல்கல்லை எட்டி உள்ளன. தற்போது நாம் 60 ஆண்டுகால அரசுமுறை உறவை கொண்டாடி வருகிறோம். மங்கோலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது கவுரவம். 25 ஆண்டு கால மங்கோலிய ஜனநாயகத்தில் இது சிறப்பான செயல்பாடு ஆகும்.
உறவை காட்டிலும் சிறந்தது எதுவும் இல்லை. இருதரப்பு உறவுகள் நமது பொருளாதார உறவை வலுவடைய செய்கின்றன. இந்தியா, மங்கோலியாவில் புத்த மதத்திற்கு ஒரு புதிய மறுமலர்ச்சியை அளித்துள்ளது.
இளைய இந்தியாவின் ஆற்றல், 35 வயதிற்குட்பட்ட 800 மில்லியன் இளைஞர்களிடம் இருந்து கிடைக்கிறது. மக்களுக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்துவதன் மூலம் உலகிற்கு உதவும் திறனை வளர்க்க முடியும். மங்கோலியாவின் பொருளாதார வளர்ச்சி என்னை மிகவும் கவர்ந்துள்ளது. உலக பொருளாதாரத்தின் புதிய இயந்திரத்தில் இந்தியா முக்கிய இடம் வகிக்கும். புத்த மதம் மற்றும் ஜனநாயகம் ஆசியாவின் அமைதியையும் ஒருங்கிணைப்பையும், சமத்துவத்தையும் ஏற்படுத்துகிறது. ஆசிய கண்டம் தான் 21ம் நூற்றாண்டில் உலகிற்கு தலைமை வகிக்கும். கடந்த அரை நூற்றாண்டுகளில் ஆசியாவை போன்று உலகின் வேறு எந்த பகுதியும் வளர்ச்சி அடையவில்லை.
ஓராண்டிற்கு முன் 1.25 பில்லியன் மக்கள் மாற்றத்திற்கு ஓட்டளித்து, வரலாற்றில் மிகப் பெரிய ஜனநாயக வளர்ச்சியை ஏற்படுத்தினர். கடந்த ஓராண்டுகளில் உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. வெறும் வர்த்தகம் மற்றும் முதலீட்டை விட நமது கொள்கைகள் மற்றும் திட்டங்களை பகிர்ந்து கொள்வதிலேயே நமது வளர்ச்சியின் நட்புறவு பிரதிபலிக்கும். நமது நாடுகளிலும் வெளிநாடுகளிலும் சிறப்பு மிக்க சிகிச்சைகளை அளிக்க நமது பாரம்பரிய மருத்துவ முறைகளை நாம் பயன்படுத்த வேண்டும். நமது சவால்கள் மீத நாம் கவனம் செலுத்த வேண்டும். அதே சமயம் நமது கொள்கைகள் மற்றும் நல்லாட்சி மீது நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்' என்றார்.
ரூ. 6000 கோடி ஒப்பந்தம்:
முன்னதாக மங்கோலிய பிரதமர் சைகான்பிலக்கை சந்தித்தார் மோடி. அப்போது இரு நாடுகளிடையே ரூ.6000 கோடி மதிப்பிலான சுகாதாரம், விவாயம் உள்ளிட்ட 21 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அப்போது, ‘கிழக்கிந்திய கொள்கைகளின்படி மங்கோலியா இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. மங்கோலியாவின் பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பிற்கு இந்தியா சார்பில் ஒரு பில்லியன் டாலர் உதவிகள் வழங்கப்படும். நமது பொருளாதார உறவை புதிய நிலைக்கு நாம் எடுத்துச் செல்வோம். பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். நமது ஒப்பந்தங்கள் எல்லை பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்பை அடிப்படையாக கொண்டதாக இருக்கும். மங்கோலியா இந்தியாவின் ஆன்மிக நட்பு நாடு. சைபர் பாதுகாப்பு மையங்களை அமைக்க வேண்டும். இந்தியா-மங்கோலியா இடையேயான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவு நவீனமயமாக்கப்படும். இரு நாடுகளின் கூட்டமைப்பில் பள்ளி அமைக்கப்படும். மங்கோலியாவில் புற்றுநோய் ஆய்வு மையம் அமைக்க இந்தியா உதவி செய்யும்' என மோடி உறுதி அளித்தார்.












Click it and Unblock the Notifications