விண்கல் திட்டத்திற்கான 3வது கல்லையும் கண்டெடுத்தது நாசா.. அதன் பெயர் 2011 எம்.டி.!
வாஷிங்டன்: விண்வெளி ஆராய்ச்சிக்காக சந்திரனைச் சுற்றி விண்கற்கள் அமைக்கும் திட்டத்திற்கு பொருத்தமான மூன்றாவது கல் கிடைத்திருப்பதாக நாசா அறிவித்துள்ளது.
விண்வெளி, அதிலுள்ள கிரகங்கள் மற்றும் அவற்றின் துணைக் கிரகங்கள் குறித்து சர்வதேச அளவில் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ‘விண்கல் (திருப்புதல்) திட்டம் என்ற ஒன்றை செயல்படுத்தி வருகிறது.

அதாவது வருங்காலத்தில் விண்வெளி வீரர்கள் விண்கற்களில் இறங்கி ஆராய்ச்சி செய்வதற்கு ஏதுவான கற்களைத் தேர்வு செய்து சந்திரனுக்கு அருகில் நிறுத்தி வருகிறது. ஏற்கனவே இத்திட்டத்திற்கென இரண்டு விண்கற்களைத் தேர்வு செய்து விட்ட நாசா, தற்போது மூன்றாவது கல்லையும் அடையாளம் கண்டு விட்டதாம்.
2011 எம்.டி...
ஸ்பிரிட்சர் தொலைநோக்கி மூலமாக கண்டறியப் பட்டுள்ள இந்த விண்கல்லிற்கு 2011 எம்.டி எனப் பெயரிட்டுள்ளது நாசா.
வெற்றிடம்...
பூமிக்கு அருகில் உள்ள விண்கல்லானது தோராயமாக 20 அடி அளவில் அமைந்திருப்பதாகவும், இதன் உள்ளே வெற்றிடமாக இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பார்ப்பதற்கு கட்டிட இடிபாடுகளை குவித்து வைத்திருப்பது போன்ற தோற்றத்தில் உள்ளதாம் இந்த விண்கல்.
தகுதிகள்...
மேலும், இந்த விண்கல்லானது உருவம் மற்றும் பண்புகளில் நாசாவின் விண்கல் திட்டத்திற்கு ஏற்றபடி அமைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
துல்லியமான தகவல்கள்...
ஸ்பிட்சர் கண்டறிவதற்கு முன்னதாகவே இந்த விண்கல் குறித்து ஆராய்ச்சியாளர்களுக்கு தெரிய வந்தபோதும், தற்போது தான் துல்லியமான தகவலகள் கிடைக்கப் பெற்றுள்ளதாம்.
முதல் இரண்டு விண்கற்கள்...
2011 எம்.டி க்கு முன்னதாக நாசா தேர்வு செய்த மற்ற இரண்டு விண்கற்களின் பெயர் முறையே 2009 பிடி மற்றும் 2013 இசி 20 ஆகும்.
ரோபோடிக் விண்கலம்...
தற்போது ஆராய்ச்சிக்கு தேர்வாகியுள்ள இந்த விண்கற்களை ரோபாடிக் விண்கலம் மூலமாக, ஏற்கனவே தேர்வு செய்துள்ள இடத்திற்கு நகர்த்தி கொண்டு செல்ல நாசா திட்டமிடப் பட்டுள்ளது.
2020ம் ஆண்டு...
இனி, வரும் காலத்தில் விண்வெளி வீரர்கள் இந்த விண்கற்களில் இறங்கி அருகிலுள்ள கோள்கள் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக இந்த முன்னேற்பாடு திட்டம் செயல்படுத்தப் படுகிறது. இதன்படி, வரும் 2020ல் விண்வெளி வீரர்கள் இந்த விண்கற்களில் இறங்கி ஆராய்ச்சி மேற்கொள்வார்கள் என நாசா தெரிவித்துள்ளது.
தொடரும் தேடுதல் பயணம்...
இந்த மூன்று கற்களோடு தனது தேடுதல் பயணத்தை நாசா முடித்துக் கொள்ளப் போவது இல்லையாம். இன்னும் சில பொருத்தமான கற்களைத் தேடும் பணி நடந்து வருகிறதாம்.












Click it and Unblock the Notifications