துபாயில் இந்தியரின் தங்கச் சங்கிலியைப் பறித்த இந்தியத் திருடனுக்கு 3 ஆண்டுகள் ஜெயில்!
துபாய்: துபாயில் சக இந்தியர் ஒருவரின் தங்க சங்கிலியை பறித்த இந்தியருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
துபாயில் வேலையில்லாமல் சுற்றித் திரிந்த இந்திய இளைஞர்கள் இருவர் லாண்டரி தொழில் நடத்தி கழுத்தில் பெரிய தங்க சங்கிலி அணிந்திருந்த இந்தியர் ஒருவரை அணுகி நைசாக பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களில் ஒருவர் மறைத்து வைத்திருந்த பெப்பர் ஸ்பிரே எனப்படும் மயக்கம் வரவழைக்கும் காட்டம் மிகுந்த மிளகு தூள் ஸ்பிரேயை லாண்டரி தொழிலதிபர் முகத்தில் அடித்துள்ளார். இதில் அவர் மயங்கி விழுந்துள்ளார்.
லாண்டரி தொழிலதிபர் அணிந்திருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க சங்கிலியை மற்றொருவர் பறித்து சென்றார். சங்கிலி பறிப்பு கொள்ளையர்களில் பெப்பர் ஸ்பிரே அடித்தவர்களில் ஒருவர் சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.
மற்றொருவர் தலைமறைவாகி விட்டார். பிடிபட்ட கொள்ளையனுக்கு நேற்று முன்தினம் மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை நிறைவு செய்ததும் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என துபாய் நீதிமன்றம் அறிவித்தது.