தொடரும் துயரம்! கிரீஸ் அருகே அகதிகளை ஏற்றி வந்த படகு கவிழ்ந்து விபத்து.. 100+ குழந்தைகளின் நிலை என்ன
ஏதென்ஸ்: தெற்கு கிரீஸில் அகதிகள் வந்த மீன்பிடி படகு திடீரென மூழ்கிய நிலையில், அந்த படகில் சுமார் 100 குழந்தைகள் இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் உள்நாட்டுப் போர், மிக மோசமான பொருளாதார மந்தநிலை என பல்வேறு காரணங்களால் சொந்த நாட்டையும் மக்களையும் இழந்து பல ஆயிரம் பேர் அகதிகளாக வெளியேறி வருகின்றனர். சில நாடுகள் மட்டும் அகதிகளை ஏற்று வருகின்றன.
கப்பல், சின்ன படகு என மிகவும் ஆபத்தான வகையில் பயணம் செய்தே பெரும்பாலும் இவர்கள் சொந்த நாடுகளை விட்டு வெளியேறுவார்கள். அதுபோன்ற நேரங்களில் சில சமயம் மிக மோசமான விபத்துகளும் அரங்கேறி விடுகிறது.

கிரீஸ்: அப்படியொரு மோசமான விபத்து தான் இப்போது கிரீஸ் நாட்டின் அருகே நடந்துள்ளது. பெலோபொன்னீஸில் படகு கவிழ்ந்து மூழ்கியதில் இந்த மோசமான விபத்து நடந்துள்ளது. இது அயோனியன் கடலில் சர்வதேச கடற்பகுதியில் நடந்தாக கூறப்படுகிறது. இந்தப் படகு பலத்த காற்றில் சிக்கிக் கவிழ்ந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அகதிகள் வந்த மீன்பிடி படகு கவிழ்ந்த தகவல் கிடைத்தவுடன் மீட்புப் பணிகளில் கிரீஸ் தீவிரம் காட்டியது.
இந்த பேரழிவில் குறைந்தது 78 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் பலர் கடலில் மாயமாகியுள்ளதாக அஞ்சப்படுகிறது. அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் 100 குழந்தைகள் 750 பேர் வரை இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே ஆட்கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகத்தின் அடிப்படையில் எகிப்து நாட்டை சேர்ந்த சிலர் உட்பட 9 பேரை கிரீஸ் போலீஸ் கைது செய்துள்ளது.
தென்மேற்கு கடற்கரையில் இருந்து கிட்டத்தட்ட 50 கடல் மைல் தொலைவில் சின்ன படகு கவிழ்ந்த பகுதியில் மீட்புக்குழுவினர் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து வருகின்றனர். இதில் பயணித்தவர்களில் இன்னும் பலரது நிலை என்னவென்று தெரியாமல் உள்ள நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்குமோ என்ற அச்சம் நிலவி வருகிறது.
குழந்தைகள்: இந்த சிறிய படகு எகிப்தில் இருந்து காலியாக புறப்பட்டு லிபிய துறைமுகமான டோப்ரூக்கில் நிறுத்தப்பட்டது.. அங்கு அது இத்தாலிக்கு அகதிகளாகச் செல்வோரை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மீட்கப்பட்ட அகதிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் கூறுகையில், "சிகிச்சையின் போது இந்த சிறு படகில் 100+ குழந்தைகள் இருந்ததாகச் சொன்னார்கள். படகில் கீழ்த் தளத்தில் குழந்தைகளும் பெண்களும் இருந்துள்ளனர்.
இருப்பினும், அங்கே துல்லியமாக எத்தனை குழந்தைகள் இருந்தனர் என்பது யாருக்கும் தெரியவில்லை. ஒரு சிலர் 50 குழந்தைகள் இருந்ததாகவும் மற்றொரு தரப்பினர் 100 குழந்தைகள் இருந்ததாகவும் கூறுகின்றனர். குழந்தைகள் எத்தனை பேர் எனத் துல்லியமாகத் தெரியவில்லை.
இந்த விபத்தில் சுமார் 600 பேர் உயிரிழந்திருக்கலாம். ஏனென்றால் என்னிடம் பேசிய அனைவரும் மொத்தம் 750 பேர் இந்த படகில் பயணித்ததாகத் தெரிவித்தனர்" என்று அவர் தெரிவித்தார். மாயமான குழந்தைகளைத் தேடும் பணிகள் இப்போது முழு வீச்சில் நடந்து வருகிறது.
இந்தப் படகு கவிழ்ந்த போது அங்கே இருந்த பெற்றோர் பலரும் தங்கள் குழந்தைகளைக் காக்கவே முதலில் முயன்றதாக இந்த விபத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய தரைக்கடல் பகுதியில் அகதிகள் வரும் படகு, கப்பல் விபத்தில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த 2015 முதல் ஒவ்வொரு ஆண்டும் 1000 பேராவது விபத்தில் சிக்குகிறார்கள். அதிகபட்சமாக 2016இல் 4500 அகதிகள் மத்திய தரைக்கடல் பகுதியில் உயிரிழந்தனர்.

நைஜீரியா: முன்னதாக சில நாட்களுக்கு முன்பு ஆப்பிரிக்காவின் மத்திய நைஜீரியாவில் நைஜர் ஆற்றில் படகும் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் 100க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். நைஜீரியாவின் மிகப் பெரிய நதியான நைஜர் ஆற்றில் படகு போக்குவரத்து இருக்கும். அதன்படி அதிகப்படியான நபர்களை ஏற்றி வந்த படகு ஒன்று நைஜர் ஆற்றில் கவிழ்ந்ததில் 100+ பேர் உயிரிழந்தனர். திருமணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய பலரும் இந்த விபத்தில் சிக்கினர்.
இந்த விபத்தின் போது பெற்றோர் பலரும் தங்களைக் குழந்தைகளைக் காக்கவே முயன்றுள்ளனர். பெற்றோர் தங்கள் குழந்தைகளைக் கையிலும் தோளிலும் தூக்கிக் கொண்டு கரைக்கு வர முயன்றுள்ளனர். இருப்பினும், பெரும்பாலானோரால் கரையை அடைய முடியவில்லை. 300+ பேர் இதில் பயணித்த நிலையில், இதில் 100க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக மூழ்கி உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications