"சாரி மேம்.." தேசிய கொடியில் ஆட்டோகிராப் கூட போட மறுத்த நீரஜ் சோப்ரா! இதயங்களை வென்ற தங்க மகன்
புடாபெஸ்ட்: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று பெருமை சேர்ந்த நிலையில், அதன் பிறகு அவர் செய்த காரியம் அனைவரையும் கவரும் வகையில் இருக்கிறது.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வந்தது. இதற்கு முன்பு வரை இந்தியா உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் 2 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தது.

இதற்கிடையே இந்தாண்டு நடந்த ஈட்டி எறிதலில் இறுதிப் போட்டிக்குத் தங்க மகன் நீரஜ் சோப்ரா முன்னேறி இருந்தார். அவருடன் மேலும் இரண்டு வீரர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்த நிலையில், நிச்சயம் ஒருவருக்காவது பதக்கம் கிடைக்கும் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
தங்கம்: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்றிரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா முதல் முயற்சியில் பவுல் செய்தார். இருப்பினும், 2வது முயற்சியில் 88.17 மீ தூரம் எறிந்தார். அவருக்குப் பிறகு பல வீரர்கள் பல முறை ஈட்டியை வீசிய போதிலும் யாராலும் நீரஜ் சோப்ரா வீசிய இந்த 88.17 மீ என்ற தூரத்தைத் தாண்டவே முடியவில்லை. இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா..!
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இதுவரை இந்தியர் யாரும் தங்கம் வென்றதே இல்லை என்ற நிலையை மாற்றி வரலாறு படைத்தார். இதற்காக நீரஜ் சோப்ராவை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இந்த வெற்றி மட்டுமின்றி அதன் பிறகு நீரஜ் சோப்ரா செய்த காரியமும் அனைவரது மனதையும் வெல்வதாக அமைந்துள்ளது. பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிடம் பலரும் ஆடோகிராப் வாங்கிய நிலையில், அப்போது நடந்த ஒரு சம்பவத்தை நெட்டிசன் போட்டோவுடன் பகிர்ந்துள்ளார்.
சாரி முடியாது: அதில் புடாபெஸ்டில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவை அணுகிய ஹங்கேரி நாட்டு ரசிகர் ஒருவர், இந்தியக் கொடியில் ஆட்டோகிராப் கேட்டார். இருப்பினும், அதை அமைதியாக மறுத்த நீரஜ் சோப்ரா "இது எனது தேசியக் கொடியின் விதிமுறைகளுக்கு எதிரானது.. என்னால் இதில் கையெழுத்திட முடியாது" என்று சொல்லி சைலெண்டாக மறுத்துவிட்டார்.

அதற்குப் பதிலாக அவர் டீ சர்ட்டில் ஆட்டோகிராப் போட்டுள்ளார். நீரஜ் சோப்ராவின் இந்த செயலை நெட்டிசன்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். விளையாட்டில் மட்டுமின்றி தேசியக் கொடியை மதிப்பதிலும் நீரஜ் சோப்ரா நிஜமாகவே வேற லெவல் தான் என பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும், மூவர்ணக் கொடி டெஸ்கில் இருக்க நீரஜ் சோப்ரா பெண் ரசிகையின் டீ சர்ட்டில் ஆட்டோகிராப் போடும் படமும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
குவியும் பாராட்டு: நீரஜ் சோப்ரா கொடியில் கையெழுத்திட மறுத்த இந்த செயலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், "நீரஜ் சோப்ராவின் செயல் நிஜமாகவே பாராட்டத்தக்கது.. அவர் நம் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார். இந்தியக் கொடியின் மீதான அவரது பணிவும் மரியாதையும் பாராட்டுக்குரியது" என்று பதிவிட்டுள்ளார்.
25 வயதான நீரஜ் சோப்ரா டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications